Published : 03 Jul 2018 08:05 PM
Last Updated : 03 Jul 2018 08:05 PM

சென்னையில் 4 நாட்கள் சினிமா பயிற்சிப் பட்டறை

திரைப்பட விழாவுடன் கூடிய சினிமா பயிற்சிப் பட்டறை சென்னையில் நடைபெற இருக்கிறது.

ரஷ்ய கலாச்சார மையத்தில் வருகிற 5,6,7 மற்றும் 8 ஆகிய நான்கு நாட்கள் திரைப்பட விழாவுடன் கூடிய சினிமா பயிற்சிப் பட்டறை நடக்கிறது. ‘அயல் சினிமா’ மாத இதழும், ரஷ்யக் கலாச்சார மையமும் இணைந்து ஏற்பாடு செய்திருக்கும் இந்த நிகழ்வு, ஒவ்வொரு நாளும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நடக்க இருக்கிறது.

இந்தப் படவிழா பயிலரங்கில், உலக சினிமா முதல் உள்ளூர் சினிமா வரை, குறும்படங்கள் முதல் ஆவணப்படங்கள் வரை ஒவ்வொரு நாளும் மூன்று பகுதியாகப் பிரிக்கப்பட்டு, திரையிடலும், பயிற்சி வகுப்புகளும் நான்கு நாட்களுக்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.

இந்தப் பயிற்சிப் பட்டறையின் நான்கு நாட்களும், தேசிய விருதுபெற்ற இயக்குநர்கள் செழியன், சீனு ராமசாமி , எழுத்தாளர் ஜி.முருகன், ஒளிப்பதிவாளர் சி.ஜெ.ராஜ்குமார், ஆவணப்பட இயக்குநர்கள் ஆர்.ஆர்.சீனிவாசன், ரவி சுப்ரமணியம், ஆர்.பி.அமுதன் ஆகியோர் திரைப்பட உருவாக்கம், ஒளிப்பதிவு, ஆவணப்படம் குறித்த வகுப்புகளை எடுக்கிறார்கள்.

முதல் முறையாகப் பத்திரிகையாளர், ஆவணப்பட இயக்குநர் டி.அருள் எழிலன் இயக்கிய ‘பெருங்கடல் வேட்டத்து’என்ற ஆவணப்படம் திரையிடப்படுகிறது. இது, கடந்த ஓகி புயலில் காணாமல் போன மீனவர்கள் பற்றிய கண்ணீர் உகுக்கும் ஆவணப் பதிவாகும். இத்திரையிடலில் இயக்குநர் ராஜு முருகன், பத்திரிகையாளர்கள் ப.திருமாவேலன், மு.குணசேகரன், ஆர்.சி.ஜெயந்தன் ஆகியோர் பங்கேற்கின்றனர். இவர்களோடு, இயக்குநர் 'ஆயிஷா' சிவக்குமார், இயக்குநர் கேபிள் சங்கர் ஆகியோரும் பங்கேற்கின்றனர்.

இதில் கலந்துகொள்பவர்கள், திரைப்படம் பற்றிய ரசனை சார்ந்த நமது புரிதல், அதுகுறித்த வாசிப்பு பற்றிய முழுமையான தளத்திற்கு நம்மை மடைமாற்றுவதோடு, திரைப்படம் குறித்த புதிய வகை சிந்தனையும், மாற்றுச் சினிமா மற்றும் சுயாதீன சினிமா முயற்சிகளுக்கான ஒரு அடித்தளமாகவும் இது அமையும் என்று நம்பலாம். நான்கு நாட்களுக்கான நன்கொடை ரூ. 500 மட்டுமே. மேலும் விவரங்களுக்கு 97909 46650 என்ற எண்ணுக்குத் தொடர்புகொண்டு கூடுதல் விவரங்களைத் தெரிந்துகொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x