Published : 13 Jul 2018 02:15 PM
Last Updated : 13 Jul 2018 02:15 PM

“காயத்ரிக்குப் பிறகு ஆகச்சிறந்த நடிகை மடோனா செபாஸ்டியன்” - விஜய் சேதுபதி புகழாரம்

‘காயத்ரிக்குப் பிறகு ஆகச்சிறந்த நடிகை மடோனா செபாஸ்டியன்’ எனப் புகழ்ந்துள்ளார் விஜய் சேதுபதி.

விஜய் சேதுபதி நடித்து, தயாரித்திருக்கும் படம் ‘ஜுங்கா’. கோகுல் இயக்கியுள்ள இந்தப் படத்தில், சயீஷா மற்றும் மடோனா செபாஸ்டியன் என இரண்டு ஹீரோயின்கள் நடித்துள்ளனர். சித்தார்த் விபின் இசையமைத்துள்ள இந்தப் படத்தை, நடிகர் அருண் பாண்டியன் வெளியிடுகிறார்.

இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய விஜய் சேதுபதி, “இயக்குநர் கோகுல் மீது எனக்கு எப்போதும் பெரிய நம்பிக்கை உண்டு. அவருடைய எண்ண அலைகள் எப்போதும் என்னை வசீகரிக்கும். அதனை என்னால் எளிதில் உட்கிரகிக்க இயலும். இதுதான் 'ஜுங்கா'வில் நான் நடிக்க ஒப்புக்கொண்டதற்கு முதல் காரணம்.

அதன் பிறகுதான் அருண் பாண்டியன் வந்தார். அவரைக்‘கருப்புத் தங்கம் ’ என்று சொல்லலாம். அவருக்கும் எனக்கும் இடையே எந்தவொரு வணிகத் தொடர்பும் இல்லை. படத்தின் கதையைக் கூட கேட்காமல் தயாரிக்க முன்வந்தார். வாங்கவும் முன்வந்தார். இது எனக்கே ஆச்சரியமாக இருந்தது. இது அவரின் அனுபவ வெளிப்பாடு என்று நினைக்கிறேன். ‘உங்களுடைய கதைத்தேர்வு நன்றாக இருக்கிறது. அதனால் நீங்கள் நடிக்கும் படத்தைத் தயாரிக்க முன்வந்தேன்’ என்று முதல்முறை சந்தித்தபோது என்னிடம் சொன்னார்.

ஆஸ்திரியாவில் படபிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, இயக்குநரிடம் தொலைபேசி மூலம் கதையின் ஒன்லைன் கேட்டார். அதன்பிறகு படத்திற்கு பட்ஜெட் போடுவதாகட்டும், லொகேஷன் தேடுவதாகட்டும்... எதிலும் தலையிடவில்லை. தணிக்கைக்கு அனுப்பும்போது தயாரிப்பாளர் என்ற முறையில் படத்தைப் பார்க்க வேண்டும் என்ற காரணத்தால், ஒருமுறை படம் பார்த்தார்.

நான் கோகுல் மீது நம்பிக்கை வைப்பதும், கோகுல் என்மீது நம்பிக்கை வைப்பதும் சாதாரணமானது, இயல்பானது. ஆனால், எங்களை நம்பி அருண் பாண்டியன் வந்தார். அதுதான் ஆச்சரியமான விஷயம். இன்றைக்கு சந்தோஷமான விஷயமும் கூட.

சரண்யா பொன்வண்ணன் சீனியர் ஆர்ட்டிஸ்ட். ‘தென்மேற்குப் பருவக்காற்று ’ படத்தில், அவர் நடிக்கும் காட்சியின் உள்ளடக்கத்தை மேம்படுத்துவதில் காட்டும் அக்கறை என்னை வியக்க வைத்தது. அவரின் பொதுநலத்துடன் கூடிய இந்தச் சிந்தனை என்னை ஈர்த்தது. இந்தப் படத்தில் அவர் வடசென்னை ஸ்லாங் பேசுவதில் காட்டிய முயற்சி, இந்தக் கலையை எவ்வளவு தூரம் உண்மையாக நேசிக்கிறார் என்பதை எனக்கு உணர்த்தியது.

ஒரு காட்சியை இயக்குநரின் கற்பனை கலந்த எதிர்பார்ப்பிற்கு ஏற்ப செய்யவேண்டும் என்ற அவரின் தவிப்பை, நான் இந்தப் படத்தின் மூலம் அவரிடமிருந்து கற்றுக்கொண்டேன். சரண்யா மேடத்துடன் மீண்டும் நடிக்கக் கிடைத்த வாய்ப்பை வரமாகக் கருதுகிறேன்.

மடோனாவிற்கும் என்மீது பெரிய நம்பிக்கை. அந்த கேரக்டருக்கு மடோனா பொருத்தமாக இருப்பார் என்று இயக்குநர் கூறியதும், அவரைத் தொடர்புகொண்டு கதையைக் கேட்குமாறு சொன்னேன். அவரும் கதையைக் கேட்டார். என்னைப் பொறுத்தவரை நான் சந்தித்த ஆகச்சிறந்த நடிகை மடோனா என்பேன். இதற்கு முன் நான் காயத்ரியை அப்படிப் பலமுறை சொல்லியிருக்கிறேன். அதற்கடுத்து மடோனாவை சொல்வேன். நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்துவதில் பெரிய திறமைசாலி.

‘ஆண்டவன் கட்டளை’க்குப் பிறகு நானும் யோகிபாபுவும் இணைந்து நடிக்கும் இரண்டாவது படம் இது. படப்பிடிப்பு தளத்தில் அந்த கேரக்டருக்கு, அந்த தருணத்தில் என்ன பஞ்ச் பேச முடியுமோ, அதைப் பேசி அசத்துவார். இந்தப் படத்தை நாங்கள் ரசித்து ரசித்து செய்திருக்கிறோம். இந்த மாதம் 27-ம் தேதி படம் ரிலீஸ்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x