Last Updated : 23 Jul, 2018 04:44 PM

 

Published : 23 Jul 2018 04:44 PM
Last Updated : 23 Jul 2018 04:44 PM

எழுத்தாளர்கள் சங்க விவகாரம்: இயக்குநர் விசு மீது இயக்குநர் பாக்யராஜ் புகார்

சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் இயக்குநர் விசு மீது இயக்குநர் பாக்யராஜ் புகார் அளித்திருக்கிறார்.

இன்று (ஜூலை 23) காலை சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் இயக்குநர் விசு மீது இயக்குநர் பாக்யராஜ் புகார் அளித்தார். அதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்கள் மத்தியில் இயக்குநர் பாக்யராஜ் புகாருக்கான காரணத்தை தெரிவித்த போது கூறியதாவது:

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில், சமீபமாக நாங்கள் அனைவரும் பொறுப்புக்கு வந்திருக்கிறோம். இதற்கு முன்பாக நலிந்த எழுத்தாளர்களுக்கு கல்வி தொகை, மருத்துவ உதவி உள்ளிட்டவை என்று சொல்லப்பட்டது. நாங்கள் பொறுப்புக்கு வந்தவுடன், அந்த அறக்கட்டளை நிலைமை என்னவென்று தெரிந்து கொள்ள அனைவரையுமே அழைத்தோம்.

விசு அவர்கள் எனக்கு வயதாகிவிட்டதால், பிறைசூடனைத் தொடர்பு கொள்ளுங்கள். அவர் தான் அனைத்துப் பொறுப்புகளையும் பார்த்துக் கொண்டிருந்தார் என்றார். மற்றவர்களும் பிறைசூடன் தான் பொறுப்பு என்றார்கள். ”வாருங்கள். இது குறித்து சங்கத்தில் பேச வேண்டும். பணமில்லை அனைத்துமே அறக்கட்டளையில் இருக்கிறது” என்று பிறைசூடனிடம் சொன்னோம்.  அவர் சங்கம் வேறு, அறக்கட்டளை வேறு. இதற்கும் அதற்கு சம்பந்தமில்லை என்றார். சங்கத்திலிருந்து தானே பணமெடுத்து அறக்கட்டளை தொடங்கினீர்கள். பிறகு எப்படி சம்பந்தமில்லை என்று சொல்லமுடியும் என்று கேட்டோம்.

அதற்கு எழுத்தாளர் பிறைசூடன், ‘நாங்கள் கல்வி உதவித்தொகைக்கு எல்லாம் உதவி செய்ய மாட்டோம். நலிந்தோர்களுக்கு மட்டுமே செய்வோம். நாங்கள் ஒரு சில விதிமுறைகள் வைத்திருக்கிறோம். அதில் நீங்கள் தலையிட முடியாது’ என்றார். மேலும், உங்களிடம் எனக்கு சம்பந்தமில்லை என்று சொல்லியிருக்கலாம். ஆனால், என்னிடம் தினமும் பேசிக் கொண்டுத்தான் இருக்கிறார். இதற்கு அவர் ஒப்புக் கொள்ள மாட்டேன் என்கிறார் என்று பிறைசூடன் சொல்கிறார். சங்கத்தின் அனைத்துக் கோப்புகளையும் வீட்டுக்கு எடுத்துச் சென்றுவிட்டார். அதையும் நாங்கள் பார்க்க முடியவில்லை.

இதற்கு வேறுவழியில்லாத காரணத்தால், அந்த அறக்கட்டளையில் இருந்த செயலாளர் பிறைசூடன், தலைவர் விசு உள்ளிட்டோர் மீது கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் அளித்திருக்கிறோம். சங்கத்துக்காக அப்பணம் உதவ வேண்டும் என்ற நோக்கத்துடன் புகார் அளித்திருக்கிறோம். விசாரணை செய்து தொடர்பு கொள்கிறே என்று தெரிவித்திருக்கிறார்கள்

இவ்வாறு பாக்யராஜ் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x