“கடந்த 49 ஆண்டுகளாக அவர்தான் ஒரே நாயகன்” - இளையராஜா குறித்து சூரி புகழாரம்

“கடந்த 49 ஆண்டுகளாக அவர்தான் ஒரே நாயகன்” - இளையராஜா குறித்து சூரி புகழாரம்
Updated on
1 min read

சென்னை: கடந்த 49 ஆண்டுகளாக காதணி விழா, திருமண விழா என அனைத்து விழாக்களிலும் இளையராஜா மட்டும்தான் நாயகனாக இருந்து கொண்டிருக்கிறார் என்று ’விடுதலை 2’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகர் சூரி தெரிவித்துள்ளார்.

வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியானது ‘விடுதலை’ முதல் பாகம். இதன் நீட்சியாக இரண்டாவது பாகம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, சூரி, பவானி ஸ்ரீ, மஞ்சுவாரியர், கிஷோர், கவுதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், போஸ் வெங்கட், இளவரசு, பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இளையராஜா இசையமைத்துள்ளார். ஆர்.எஸ்.இன்போடைன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படம் வரும் டிசம்பர் 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று (நவ.26) சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் சூரி பேசியதாவது: “இந்த விழாவில் மட்டுமல்ல கடந்த 49 ஆண்டுகளாக காதணி விழா, திருமண விழா என அனைத்து விழாக்களிலும் இளையராஜா மட்டும்தான் நாயகனாக இருந்து கொண்டிருக்கிறார். நான் சினிமாவுக்கு வந்த புதிதில் ஏறாத இடம் இல்லை, பார்க்காத வேலை இல்லை. அந்த வேலைகளை பார்த்துவிட்டு வந்து கை,கால் வலியுடன் படுத்தால் எதிர்வீட்டு ஜன்னலில் லேசாக இளையராஜா பாடல் கேட்கும். அந்த வீட்டு கதவை தட்டி கொஞ்சம் கதவை திறந்து விடுங்கள் என்று சொன்னால், அவருடைய பாடல் தென்றல் போல வந்து நம்மை தட்டி எழுப்பும். ஒரு தாயைப் போல இருந்து அவருடைய பாடல் நம்மை ஆறுதல்படுத்தும்.

ஒவ்வொரு காலகட்டத்துக்கும் ஒரு ‘ஆப்ஷன்’ இருக்கும். ஆனால் ‘ஆப்ஷன்’ எதுவும் இல்லாத ஒரே ‘ஆப்ஷன்’ இளையராஜா மட்டும்தான். அவருக்கு மாற்று என்பதே கிடையாது. அவருடைய அலுவலகத்தில் அவருடைய வாழ்க்கையில் நடந்த விஷயங்களை அவர் வாயால் சொல்லி கேட்டது எனக்கு மிகப்பெரிய பெருமை. நான் மட்டுமில்லாமல் என் சந்ததிகள் கூட போற்றி பாதுகாக்க வேண்டிய பெருமை அது” இவ்வாறு சூரி தெரிவித்தார். வாசிக்க > ‘விடுதலை 2’ ட்ரெய்லர் எப்படி? - வெற்றிமாறனின் அழுத்தமான காட்சிகள், வசனங்கள்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in