வனத்தில் மரங்களை வெட்டியதாக யஷ்ஷின் ‘டாக்சிக்’ பட தயாரிப்பாளர் மீது வழக்கு

வனத்தில் மரங்களை வெட்டியதாக யஷ்ஷின் ‘டாக்சிக்’ பட தயாரிப்பாளர் மீது வழக்கு
Updated on
1 min read

பெங்களூரு: படப்பிடிப்புக்காக வனப்பகுதியில் நூற்றுக்கணக்கான மரங்களை வெட்டிய புகாரில் ‘டாக்சிக்’ பட தயாரிப்பாளர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான ‘கேஜிஎஃப்’ சீரிஸ் படங்களின் பிரமாண்ட வெற்றிக்குப் பிறகு யஷ் நடிக்கும் புதிய படத்தை மலையாள இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்குகிறார். இந்தப் படத்துக்கு ‘டாக்சிக்’ (TOXIC) என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் நயன்தாரா, தாரா சுட்டேரியா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். கே.வி.என் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்து வருகிறது.சமீபத்தில்தான் இந்தப் படத்தின் பூஜை போடப்பட்டு, படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. இந்நிலையில், பெங்களூருவின் பீன்யா - ஜலஹள்ளி வனப்பகுதியில் பிரமாண்ட செட் அமைப்பதற்காக நூற்றுக்கணக்கான மரங்களை ‘டாக்சிக்’ படக்குழுவினர் வெட்டியுள்ளனர்.

அண்மையில் கர்நாடக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஈஷ்வர் காந்த்ரே இந்தப் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கிருந்த மரங்கள் சட்டவிரோதமாக வெட்டப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து மரங்களை வெட்ட அனுமதியளித்தவர்கள் உள்ளிட்ட சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் படத்தின் தயாரிப்பாளர் மற்றும் ஹிந்துஸ்தான் மெஷின் டூல்ஸ் (HMT) நிறுவனம் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in