Published : 17 May 2018 04:52 PM
Last Updated : 17 May 2018 04:52 PM

“அரசியல் பேசுபவர்கள் உடனே களத்துக்கு வந்துவிட வேண்டும்” - விஜய் ஆண்டனி

‘அரசியல் பேசுபவர்கள் உடனே களத்துக்கு வந்துவிட வேண்டும்’ என விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார்.

விஜய் ஆண்டனி நடிப்பில் நாளை ரிலீஸாக இருக்கும் படம் ‘காளி’. கிருத்திகா உதயநிதி இயக்கியுள்ள இந்தப் படத்தில், அஞ்சலி, சுனைனா, ஷில்பா மஞ்சுநாத், அம்ரிதா என 4 ஹீரோயின்கள் நடித்துள்ளனர்.

படத்தின் புரமோஷனில் பிஸியாக இருந்தவரிடம், அரசியல் குறித்து ‘தி இந்து’வுக்காகக் கேட்டேன்.

பெரும்பாலான நடிகர்கள் வெளிப்படையாக அரசியல் பேச ஆரம்பித்து விட்டார்களே...

‘நாட்டில் நிறைய பிரச்சினைகள் இருக்கின்றன. இதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?’ என சமீபத்தில் ஒருவர் கேட்டார். ‘சிரியாவை எடுத்துப் பாருங்கள்... நம்ம நாட்டில் இருப்பதெல்லாம் பிரச்சினையே கிடையாது. ஒரு வீட்டை நிர்வகிக்கவே எவ்வளவு கஷ்டப்படுகிறோம்? அப்படியிருக்கும்போது, ஒரு நாட்டை நிர்வகிப்பது சாதாரண விஷயமா என்ன? ஒருவர் ஆட்சிக்கு வந்த உடனேயே, ‘ஏன் இதைச் செய்யவில்லை? ஏன் அதைச் செய்யவில்லை?’ என்று குதிக்கிறார்கள். எனக்குத் தெரிந்து சமூக வலைதளங்கள் வந்த பிறகுதான் இதுபோன்று கேட்பது அதிகமாகி விட்டது. நாடு நன்றாகத்தான் போய்க் கொண்டிருக்கிறது.

என்னைப் பொறுத்தவரைக்கும் அவர்கள் எல்லாம் அரசியல் பேசுவதைவிட, நேரடியாக அரசியலில் இறங்கிவிடலாம் என்றுதான் தோன்றுகிறது. தகுதியும் திறமையும் இருக்கும்போது, ஏன் பேசிக்கொண்டு மட்டுமே இருக்கிறீர்கள்? எப்படி பெட்டராகப் பண்ண வேண்டும் என்றுதான் உங்களுக்குத் தெரிந்திருக்கிறதே... உடனே தேர்தலில் போட்டியிடுங்கள். ‘ஒருவர் சரியில்லை’ என விமர்சனம் செய்கிறீர்கள். அப்படி என்றால், அவரைவிட நீங்கள் திறமைசாலி என்றுதானே அர்த்தம். கட்சி தேவையில்லை, சுயேட்சையாகத் தேர்தலில் நில்லுங்கள். ‘நான் நல்லவன், திறமைசாலி’ என வீடு வீடாகச் சென்று வாக்கு கேளுங்கள். பேசிக் கொண்டே இருக்காதீர்கள் என்றுதான் சொல்கிறேன். இது நடிகர்களுக்கு மட்டுமல்ல, அரசியல்வாதிகளைத் தாக்கி சமூக வலைதளங்களில் போஸ்ட் போடும் அனைவருக்கும் பொருந்தும்.

என்னைப் பொறுத்தவரை, தமிழ்நாட்டை யார் வழிநடத்தினாலும் சரி. நீங்கள் ஒருவருக்கு ஓட்டு போட்டிருக்கலாம். ஆனால், வெற்றி பெற்றது இன்னொருவராக இருக்கலாம். அவர் அரசாள்வது, நம்மையும் சேர்த்துதான். நமக்காகத்தான் வேலை செய்கிறார். எனவே, 5 வருடங்களுக்கு யார் ஆட்சி செய்தாலும், முடிந்தவரைக்கும் அவருக்கு ஒத்துழையுங்கள். போராட்டம், பிரச்சினை என அடித்து அடித்து... யோசித்துப் பாருங்கள், நாம் வண்டி ஓட்டிக் கொண்டிருக்கும்போது ஒருவர் ஸ்டியரிங்கைப் பிடித்து ஆட்டினால் எப்படி இருக்கும்?

நீங்கள் தவறாகவே தேர்வு செய்துவிட்டீர்களா? பரவாயில்லை, அடுத்த 5 வருடங்களுக்கு எந்தக் குழப்பத்தையும் விளைவிக்காமல், முடிந்தவரை அவருக்குப் பக்கபலமாக இருங்கள். 5 வருடங்களுக்குப் பிறகு மறுபடியும் உங்களுக்கு ஓட்டு போடும் வாய்ப்பு கிடைக்கும். அப்போது உங்கள் முடிவை மாற்றிக்கொண்டு, நல்லவரையே தேர்ந்தெடுங்கள். ஒருவேளை அவர் செய்வது சரியில்லை என்றால், உடனடியாகக் களத்தில் இறங்கி நீங்கள் அந்த வேலையைச் செய்து முடியுங்கள் என்பதுதான் என் கருத்து. யார் வேண்டும் என்றாலும் அரசியல் பேசலாம். பேசிவிட்டு உடனே களத்துக்கும் வந்துவிட வேண்டும்.

விஜய் ஆண்டனிக்கு அரசியல் ஆசை இருக்கிறதா?

ஆசையெல்லாம் கிடையாது. அரசியல் என்பது ஒரு பணி, சேவை. அப்படியிருக்கும்போது அதன்மீது ஒருவர் எப்படி ஆசைப்பட முடியும்? எல்லா மக்களுக்கும் சேர்த்து நல்லது செய்வதற்கு ஒரு நிலைமை வரவேண்டும். அதற்கு ஏற்றதுமாதிரி, முதலில் என்னைச் சேர்ந்தவர்களை நான் செட்டில் செய்திருக்க வேண்டும். ‘அப்பாடா... எல்லாம் முடிந்துவிட்டது. என்னை வாழவைத்த இந்த சமூகத்துக்கு ஏதாவது பண்ண வேண்டும்’ என்ற எண்ணம் வரவேண்டும். அதன்பிறகுதான் அரசியலில் இறங்க வேண்டும். இப்போதைக்கு என் எண்ணத்தில் அது கிடையாது.

இதை மிஸ் பண்ணிடாதீங்க...

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x