Published : 03 May 2018 02:35 PM
Last Updated : 03 May 2018 02:35 PM
11 பேருக்கு மட்டுமே குடியரசுத் தலைவர் விருது வழங்குவார் என்று வெளியான தகவலால், தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா அரங்கத்தில் திடீர் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
65-வது தேசிய திரைப்பட விருதுகள் கடந்த மாதம் 13 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. மொத்தம் 131 பேருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டதில், ‘காற்று வெளியிடை’ படத்தின் சிறந்த பாடல்களுக்கான விருது ஏ.ஆர்.ரஹ்மானுக்கும், ‘காற்று வெளியிடை’ படத்தில் இடம்பெற்ற ‘வான் வருவான்’ பாடலுக்காக சிறந்த பின்னணிப் பாடகிக்கான விருது சாஷா திருப்பதிக்கும், சிற்ந்த தமிழ்ப் படத்துக்கான விருது ஒளிப்பதிவாளர் செழியன் இயக்கிய ‘டூ லெட்’டுக்கும் அறிவிக்கப்பட்டது.
இந்த விருதுகள் வழங்கும் விழா, இன்று டெல்லியில் நடைபெறுகிறது. இதில், 11 பேருக்கு மட்டுமே குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் விருது வழங்குவார் என்றும், மீதமுள்ள 120 பேருக்கும் மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி வழங்குவார் என்றும் தகவல் வெளியானது. இதனால் திடீர் சர்ச்சை உருவாகியுள்ளது.
பின்னணிப் பாடகர் கே.ஜே.யேசுதாஸ், ஒளிப்பதிவாளர் செழியன் உள்பட பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். குடியரசுத் தலைவர் விருது வழங்காவிட்டால், விருது வழங்கும் விழாவைப் புறக்கணிக்கப் போவதாக 69 பேர் கடிதம் எழுதி குடியரசுத் தலைவருக்கு அனுப்பியுள்ளனர். விழாவை மட்டும் புறக்கணிப்பதாகத் தெரிவித்துள்ள அவர்கள், விருதுகளைப் பெற்றுக் கொள்வோம் என்று தெரிவித்துள்ளனர்.
விழா இன்னும் சிறிது நேரத்தில் தொடங்க இருக்கும் நிலையில், இதனால் விழா அரங்கத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT