Published : 13 May 2018 02:54 PM
Last Updated : 13 May 2018 02:54 PM
லைக்கா தயாரிப்பு நிறுவனத்துடன் விஷால் கூட்டு வைத்திருப்பதாகவும், தமிழ் ராக்கர்ஸைக் கண்டுபிடித்ததாகக் கூறும் விஷால் அவர்களை அடையாளம் காட்டாமல் ஆதரவளிப்பது ஏன் எனவும் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் போர்க் கொடி தூக்கியுள்ளனர்.
சென்னையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தயாரிப்பாளர்கள் பாரதிராஜா, ராஜன், ராதாரவி, டி. ராஜேந்தர், ஜே.கே ரித்தீஷ் உள்ளிட்டோர் தயாரிப்பாளர் சங்க பிரச்சினைகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.
ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின் பேசிய ஒவ்வொருவரும் காட்டமாகப் பேசினர்.
டி.ராஜேந்தர் பேசும்போது, "நடிகர் சங்கத்தின் வைப்பு நிதி ரூ.7 கோடி எங்கே போனது என்பதை விஷால் சொல்ல முடியுமா? பொதுக் குழுவில் கணக்கு கேட்டதற்கு இன்னும் பதில் வரவில்லை. மூத்தவர்கள் பிரிந்துகிடப்பதான் தான் யார் யாரோ பதவிக்கு வருகிறார்கள். ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதற்காகவே நான் போட்டியிடவில்லை. தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்காத கொடுமை தயாரிப்பாளர்கள் சங்கத்தில் நடந்தது. லைக்காவுடன் கூட்டு வைத்திருப்பதற்கான காரணத்தை விஷால் கூற வேண்டும். க்யூப் கட்டணத்தை குறைக்க ஸ்டிரைக் செய்தார் விஷால், ஆனால் அந்த கட்டணம் குறைந்ததா?" எனக் கொதித்தார்.
இயக்குநர் பாரதிராஜா பேசுகையில், "திரைப்படம் எடுப்பதற்கு சங்கத்தின் அனுமதி தேவையில்லை. தயாரிப்பாளர்கள் சுதந்திரத்தில் யாரும் தலையிட முடியாது. திரைத்துறையில் முதலீடு செய்பவர்கள் தமிழர்கள், ஆனால் மற்றவர்களிடம் கையேந்தி நிற்கிறோம். முதலில் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பெயரை தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் என மாற்றம் வேண்டும்" என்றார்.
யார் அந்த தமிழ் ராக்கர்ஸ்?
ராதாரவி பேசும்போது, " தமிழ் ராக்கர்ஸை கண்டுபிடித்ததாக சொல்லும் விஷால் அவர்கள் யார் என சொல்லாதது ஏன்?" என வினவினார். மேலும் கூறுகையில், "தயாரிப்பாளர் சங்கம் தேவையா என்பதே கேள்வியாக உள்ளது.
சங்கத்தின் விதிமுறைகளில் பல குளறுபடிகள் உள்ளன. தயாரிப்பாளர்கள் ஒன்றிணைந்து சங்கத்தில் மாற்றத்தை உருவாக்க வேண்டும். விஷால் பதவி விலக வேண்டும்" என வலியுறுத்தினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT