Published : 02 May 2018 05:15 PM
Last Updated : 02 May 2018 05:15 PM

வாரிசுகளின் எதிர்காலம் குறித்து கண்கலங்கிய ‘குரு சிஷ்யன்’

தங்கள் வாரிசுகளின் எதிர்காலம் குறித்து குரு - சிஷ்யனான கே.பாக்யராஜ் - பாண்டியராஜன் இருவரும் கண்கலங்கிய சம்பவம் நேற்று நடைபெற்றது.

கே.பாக்யராஜிடம் உதவியாளராகப் பணியாற்றியுள்ள மதுராஜ் இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘தொட்ரா’. பிருத்வி பாண்டியராஜன் ஹீரோவாக நடிக்க, கேரளாவைச் சேர்ந்த வீணா ஹீரோயினாக நடித்துள்ளார். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு பேசிய பாண்டியராஜன், “என் கவலை எல்லாம் பிருத்வி சினிமாவில் இன்னும் நல்ல நிலைக்கு வரவில்லையே என்பதுதான். வெற்றி, சாதாரணமாக வந்துவிடாது. உடனே வந்துவிட்டால் அதற்கு மரியாதையும் கிடையாது. எதற்கும் ஒரு நல்ல நேரம் வரவேண்டும். இந்தப் படத்தைப் பார்த்தபிறகு அந்த நல்ல நேரம் வந்துவிட்டது என நினைக்கிறேன். அந்தளவுக்கு இதில் பிருத்வியைப் பார்க்கும்போது புது தேஜஸ் தெரிகிறது” என்று நெகிழ்ச்சியாகப் பேசினார்.

அதன்பிறகு பேசிய கே.பாக்யராஜ், “தன் மகனைப் பற்றி பாண்டியராஜன் ரொம்பவே ஃபீல் பண்ணிப் பேசினார். அவரே இப்படி ஃபீல் செய்தால், அவருக்கு முன்னாடி வந்த நான், என் மகன் சாந்தனுவைப் பற்றி எவ்வளவு ஃபீல் பண்ணியிருப்பேன். 10 வருடங்களுக்கு முன்பு ‘காதல்’ படத்தில் நடிக்கச் சொல்லி சாந்தனுவுக்குத்தான் வாய்ப்பு வந்தது. படம் நிச்சயம் ஹிட்டாகும் எனத் தெரிந்தது. ஆனால், அந்தப் படத்தில் நடிப்பதற்கான வயது அவருக்கு இல்லை என மறுத்துவிட்டேன். அதற்குப்பின் அந்த வாய்ப்பு பரத்துக்குச் சென்று, மிகப்பெரிய ஹிட்டானது. யாருக்கு என்ன கிடைக்க வேண்டுமோ, அது எல்லாமே வரும் நேரத்தில்தான் வரும்” என்றார்.

“இந்தப் படம், தலைப்பிலேயே பாஸ் மார்க் வாங்கிவிட்டது. எனக்கு ‘காதல்’ படம் பிரேக் கொடுத்தது போல, பிருத்விக்கு இந்தப் படம் பிரேக் கொடுக்கும் படமாக அமையும்” என்று பேசினார் நடிகர் பரத்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x