Last Updated : 04 Aug, 2014 05:12 PM

 

Published : 04 Aug 2014 05:12 PM
Last Updated : 04 Aug 2014 05:12 PM

முதல்வரை இழிவுபடுத்திய இலங்கை அரசு பொது மன்னிப்பு கேட்க வேண்டும்: திரையுலகினர் ஆவேசம்

முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிரான அவதூறு கட்டுரை விவகாரத்தில், இலங்கை அரசு நிபந்தனையற்ற பொது மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று தமிழ்த் திரையுலகினர் ஆவேசமாக பேசினர்.

தமிழக மீனவர் பிரச்சினை தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா எழுதிய கடிதம் குறித்து இலங்கை பாதுகாப்புத் துறை இணையதளத்தில் மிகவும் அநாகரிமாக விமர்சித்து வெள்ளிக்கிழமை ஒரு கட்டுரை வெளியிடப்பட்டிருந்தது.

அந்தக் கட்டுரைக்கு, தமிழக அரசியல் கட்சிகள் கட்சி வேறுபாடின்றி கடும் கண்டனம் தெரிவித்தன. இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியிடமும் முதல்வர் ஜெயலலிதாவிடமும் நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாக இலங்கை அரசு தெரிவித்தது.

இந்த நிலையில், இலங்கை அரசுக்கு எதிராக தமிழ்த் திரையுலகினர் திங்கள்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தில் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

தென்னிந்திய திரையுலக இயக்குநர்கள் சங்கம் முன்னிலை வகித்து, சென்னை - நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை துணைத் தூதரகம் அருகே நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் நடிகர்கள் விஜய், சூர்யா, பிரபு, சிவகுமார், பார்த்திபன், ஸ்ரீகாந்த், பாக்யராஜ், விவேக், ஜீவா, விக்ரம்பிரபு, இயக்குநர்கள் ஏ.ஆர்.முருகதாஸ், கே.எஸ்.ரவிக்குமார், எஸ்.ஜே.சூர்யா, சீமான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

"உலகாண்ட தமிழனை அழிக்க நினைக்காதே", "ஆட்டம் போடும் சிங்களனே ஓட்டம் எடு இலங்கைக்கு", "குரங்கு கையில் பூமாலை கோத்தபய கையில் இலங்கை" போன்ற கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பேசியது:

சீமான்:

"தமிழக மக்களையும் இந்தியாவையும் இழிவாக பேசுவது சிங்களவர்களுக்கு புதிதானது அல்ல. இதன் தொடர்ச்சியாக நமது தமிழக முதல்வரையும் இழிவுபடுத்தியிருக்கிறார்கள். நமது முதல்வர், பிரதமருக்கு கடிதம் எழுதியதன் காரணம், தமிழக மீனவர்களை காப்பாற்றுவதற்கும், சிறையில் தவிப்பவர்களைய மீட்பதற்குமான கோரிக்கை மட்டுமே அது.

சர்வதேச கடல் எல்லையை முடிவு செய்யும்போது கச்சத்தீவு யாருக்கு என்பதைத்தான் முதலில் முடிவு செய்வோம். தமிழக மக்களின் உரிமைக்காக கடிதம் எழுதியதை கொச்சைப்படுத்தியது தவறு. இதற்காக இலங்கை அரசு நிபந்தனையற்ற பொது மன்னிப்பு கேட்க வேண்டும். 8 கோடி தமிழ் மக்களின் பிரதிநிதியான முதலமைச்சரை இழிவுபடுத்தும்போது இந்திய அரசு அதனை கண்டிக்காமல் இருக்கிறது. இந்த மாதிரி செயலை இலங்கை அரசு தொடர்ந்தால் நாங்களும் போராட்டதை தொடர்வோம்."

நடிகர் விஜய்:

"இலங்கைத் தமிழர்களையும், ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்களையும் காப்பாற்ற முயற்சியெடுக்கும் தமிழக முதல்வரை கேலி செய்யுமாறு இணையதளத்தில் சித்தரித்த இலங்கை அரசை வன்மையாக கண்டிக்கிறோம். இது ஒத்துமொத்த தமிழர்களையே இழிவுபடுத்தும் செயல், என் தாயைத் தவறாக பேசியது மாதிரியே நினைத்து வன்மையாகக் கண்டிக்கிறேன்."

பாக்யராஜ்:

"மோடியின் கொள்கை வேற மாதிரி இருக்கு. அவர் அமெரிக்க ஆதிக்கத்துக்கும் ஏகாதிபத்தியத்துக்கும் எதிராக ஆசிய நாடுகளை இணைக்கும் பணியில் இருக்கிறார். அதுல சீனா, இலங்கை, ரஷ்யா இவையெல்லாம் இருக்கு. ஆனா இந்தியாவில் தமிழ்நாட்டில் இருக்கும் பிரச்சினைகளை தீர்க்க வழிவகுக்காதது வேடிக்கையாக இருக்கு."

சரத்குமார்:

"இலங்கை அரசு இதை எதற்காக செய்திருக்கிறார்கள் என்பதை யோசிக்க வேண்டும். தொடர்ந்து தமிழக மீனவர்களின் கோரிக்கைகளுக்கும் பாதுகாப்புக்காகவும் குரல் கொடுத்திருக்கிறார் நம் முதலமைச்சர். இதில் தைரியமாக ஒரு முதலமைச்சர் ஈடுபட்டு செயல்படுத்தயிருக்கிறார் என்பதுதான் அவர்களது உறுத்தல். இதற்கெல்லாம் அஞ்சமாட்டார் நம் முதலமைச்சர்."

விக்ரமன்:

"அன்னை இந்திரா என்று கூறுகிறோம், மதர் தெரஸா என்று கூறுகிறோம், ஆனால் அம்மா என்று நமது முதலமைச்சரை மட்டும் தான் அழைக்கிறோம். இவரை இணையதளத்தில் இழிவுபடுத்திய இலங்கை அரசை கண்டிக்கிறேன். சிங்களர்களே உங்களுக்கு தெரியவில்லை நாகரிகம்... பின்பு எதற்கு இங்கே தூதரகம்."

இவ்வாறு தமிழ்த் திரையுலக கலைஞர்கள் பேசினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x