Published : 08 Feb 2018 07:21 AM
Last Updated : 08 Feb 2018 07:21 AM
பத்மவிபூஷண் விருது அறிவிக்கப்பட்ட நிமிடத்தில் இருந்து இப்போது வரை வாழ்த்துகளால் நெகிழ்ந்து கொண்டிருக்கிறேன். அனைவருக்கும் நன்றி. மக்களுக்காக என் பணியை செவ்வனே செய்துகொண்டு இருப்பேன் என்று இசையமையாளர் இளையராஜா தெரிவித் துள்ளார்.
நாட்டின் இரண்டாவது உயரிய விருதான பத்மவிபூஷண் விருதை இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு வழங்க மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனை அடுத்து நாட்டின் பல திசைகளில் இருந்து இளையராஜாவுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
இந்நிலையில் நேற்று நன்றி அறிவிப்பாக இளையராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மனப்பூர்வமாக வாழ்த்து
எனக்கு பத்மவிபூஷண் விருது அறிவிக்கப்பட்ட நிமிடத்தில் இருந்து, இன்றுவரை என்னை நேரிலும், தொலைபேசி வாயிலாகவும், மனப்பூர்வமாகவும் வாழ்த்து தெரிவித்த உலகெங்கிலும் பரவி இருக்கும் இசை ரசிகர்கள், அரசியல் பிரமுகர்கள், திரைத்துறையினர், தொழில் துறையினர், ஊடகத் துறையினர் அனைவருக்கும் நன்றி. விருது அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து இன்றுவரை நூற்றுக்கணக்கானவர்கள் தினமும் என்னை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
இந்த வாழ்த்தும், அன்பும் எனக்கு மேன்மேலும் உத்வேகத்தைத் தந்துள்ளது. என்னை நெகிழ வைத்துள்ளது. ஆண்டவனின் அருளாலும், உங்கள் அன்பாலும், மக்களுக்காக என் பணியை செவ்வனே செய்து கொண்டு இருப்பேன்.
இவ்வாறு இளையராஜா தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT