Published : 17 Jan 2018 06:00 PM
Last Updated : 17 Jan 2018 06:00 PM
'கோடைமழை' படத் தயாரிப்பாளர் அலெக்சாண்டரை நான் ஏமாற்றவில்லை என்று தயாரிப்பாளரும், நடிகருமான ஆர்.கே.சுரேஷ் கூறியுள்ளார்.
'கோடைமழை' படத்தை மறு வெளியீடு செய்ததில் தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் ஏமாற்றிவிட்டார் என்று அப்படத்தின் தயாரிப்பாளர் அலேக்சாண்டர் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்நிலையில் இப்புகார் குறித்து ஆர்.கே.சுரேஷ் கூறுகையில், '' 'கோடை மழை' என்ற படத்தை கதிரவன் இயக்கியிருந்தார். முதலில் வெளியான போது கவனிக்கப்படவில்லை.. மறுபடியும் வெளியிட வேண்டும் என்று என்னிடம் வந்தார்கள். மிகவும் கெஞ்சிக் கேட்டார்கள். அதற்கு அவர்கள் எதிர்பார்த்த மாதிரி பெரிய காம்ப்ளக்ஸ் தியேட்டர்கள் கிடைக்கவில்லை. நாங்கள் முயன்று தியேட்டர்கள் பிடித்து வெளியிட உதவினோம். படம் சுமாராக இருந்ததால் வசூலும் பெரிதாக இல்லை. இது சம்பந்தமான கணக்குகளைக் காட்டி ஐந்து லட்ச ரூபாய் பணம் கொடுத்தோம்.
ஆனால் எதுவுமே கொடுக்கவில்லை என்று தயாரிப்பாளர் சங்கத்தில் என் மீது புகார் கொடுத்திருக்கிறார்கள். அவர்கள் சம்பந்தப்பட்ட கணக்குகள் அப்படியே உள்ளன. அவர்கள்தான் வாங்கிக் கொள்ளவில்லை. அதற்கு நானா பொறுப்பு?
எதுவாக இருந்தாலும் தயாரிப்பாளர் சங்கத்தின் மூலம் பேசித் தெளிவுபடுத்தி தீர்த்துக் கொள்வதை விட்டுவிட்டு ஒரு தயாரிப்பாளர் பற்றி பொதுவில் ஊடகங்களுக்குச் செய்தி வெளியிட்டது தயாரிப்பாளர் சங்கத்தின் நடைமுறை சட்டதிட்டங்களுக்கு எதிரான செயல். அது மட்டுமல்ல இது என் பெயருக்கும் புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் செயலாகும். இது தொடருமானால் அவர்கள் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்" என்று ஆர்.கே.சுரேஷ் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT