வதந்தியாக மாறிய வாழ்த்து: மிருணாள் தாக்குர் விளக்கம்

வதந்தியாக மாறிய வாழ்த்து: மிருணாள் தாக்குர் விளக்கம்
Updated on
1 min read

ஹைதராபாத்: இந்தி நடிகையான மிருணாள் தாக்குர், ‘சீதா ராமம்’ படம் ஹிட்டானதை அடுத்து தென்னிந்தியாவிலும் புகழ்பெற்றுள்ளார். அவர் இப்போது தெலுங்கில் சில படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். அவர் நானி ஜோடியாக நடித்துள்ள ‘ஹாய் நானா’ டிச.7ம் தேதி வெளியாக இருக்கிறது. விஜய் தேவரகொண்டா நடிப்பில் ‘ஃபேமிலி ஸ்டார்’ என்ற படத்திலும் நடித்து வருகிறார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தில் மிருணாள் நாயகியாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் சமீபத்தில் நடந்த விருது விழா ஒன்றில் ‘சீதாராமம்’ படத்துக்காக சிறந்த நடிகைக்கான விருதை மிருணாள் தாக்குர் பெற்றார். விருதை வழங்கிய தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் பேசும்போது, “மிருணாள், தெலுங்கு மணமகனைப் பார்த்து விரைவில் திருமணம் செய்துகொண்டு, ஹைதராபாத்தில் செட்டில் ஆக வேண்டும்” என்று வாழ்த்தினார்.

இதையடுத்து மிருணாள், தெலுங்கு நடிகர் ஒருவரை காதலித்து வருவதாகவும் அவரை திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் செய்திகள் பரவின. இந்நிலையில் இதை மறுத்து மிருணாள் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “என் நண்பர்கள், குடும்பத்தினர் உட்பட நெருங்கியவர்கள் இதுபற்றி என்னிடம் கேட்டு வருகின்றனர். நான் எந்த தெலுங்கு பையனையும் காதலிக்கவில்லை. திருமணமும் செய்துகொள்ளவில்லை. அந்த விழாவில், அல்லு அரவிந்த் சார் ஜாலிக்காக அப்படி பேசி, வாழ்த்தினார். அது இவ்வளவு தூரம் வதந்தியாக மாறும் என்று நினைக்கவில்லை” என்று விளக்கம் அளித்துள்ளார்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in