Last Updated : 22 Jul, 2014 07:14 PM

 

Published : 22 Jul 2014 07:14 PM
Last Updated : 22 Jul 2014 07:14 PM

த்ரிஷ்யம் தமிழ் ரீமேக்கிற்கு கேரள நீதிமன்றம் தடை

கமல் நடிக்கும் ‘த்ரிஷ்யம்’ தமிழ் ரீமேக் படத்துக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மலையாளத்தில் மோகன்லால், மீனா இணைந்து நடித்து வெளி யான ‘த்ரிஷ்யம்’ படம் மிகப் பெரிய வெற்றியை பெற்றது. அந்த படத்தை தமிழில் ரீமேக் செய்து நடிக்க கமல் திட்டமிட்டார். அந்த படத்துக்கான பணிகள் பூஜை, பாடல் பதிவுடன் கடந்த சனிக்கிழமை சென்னையில் தொடங்கியது.

இந்நிலையில், மலையாள இயக்குநர் சதீஷ்பௌல் கூறிய தாவது: கடந்த 2009-ம் ஆண்டு ‘ஒரு மழைக் காலத்து’ என்ற பெயரில் இந்த கதையை எழுதினேன். அதை 2013-ம் ஆண்டில் புத்தகமாக வெளி யிட்டேன். அதற்கு 4 மாதங்களுக்கு பிறகுதான் ‘த்ரிஷ்யம்’ மலையாளப் படத்துக்கான வேலைகள் தொடங் கின. அப்போது இது குடும்பப் பின்னணி கொண்ட கதை என்று இயக்குநர் ஜீத்து கூறினார். படம் வெளியானபோது என்னுடைய கதையின் 80 சதவீத பதிவு அதில் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்.

அதன் பின்னர் என்னுடைய ‘ஒரு மழைக் காலத்து’ கதையை பொள்ளாச்சியைச் சேர்ந்த இன்பரசு என்பவரைக் கொண்டு தமிழில் எழுதிக் கொடுக்கச் செய்து அதற்கு ‘சென்னையில் ஒரு கிரைம் ஸ்டோரி’ என்ற பெயர் வைத்து திரைப்படமாக எடுக்க ஆயத்தப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் ‘த்ரிஷ்யம்’ படம் தமிழிலும் ரீமேக் ஆகிறது என்பதை அறிந்தேன். தமிழில் ரீமேக் செய்யப்பட்டால் நான் எடுக்கவுள்ள படத்துக்கு பாதிப்பு ஏற்படும். இது எனக்கு நஷ்டத்தை ஏற்படுத்தும். எனவே தமிழில் ரீமேக் செய்ய தடை விதிக்க வேண்டும் என்று கடந்த 15-ம் தேதி எர்ணாகுளம் செஷன்ஸ் நீதிமன்றத்தில் புகார் கொடுத்தேன். தமிழில் ரீமேக் செய்வதற்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x