Published : 23 Dec 2017 08:49 AM
Last Updated : 23 Dec 2017 08:49 AM

நடிகர் சங்கத்தில் இருந்து ராதாரவி நீக்கம் ஏன்?- நீதிமன்றத்தில் விஷால் விளக்கம்

பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவின்படியே நடிகர் சங்கத்தில் இருந்து ராதாரவி நீக்கப்பட்டார் என்று உயர் நீதிமன்றத்தில் விஷால் விளக்கம் அளித்துள்ளார்.

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு கடந்த 2015-ம் ஆண்டு தேர்தல் நடந்தது. இதில் நடிகர் விஷால், நாசர் ஆகியோர் தலைமையிலான அணி வெற்றி பெற்றது. இதையடுத்து முன்னாள் நிர்வாகிகளான சரத்குமார், ராதாரவி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என புதிய நிர்வாகிகள் தெரிவித்தனர். அந்த அறிவிப்பை எதிர்த்து ராதாரவி, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அப்போது ராதாரவி மீது எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டோம் என்று நடிகர் சங்கத்தின் சார்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. ஆனால் பின்னர் நடிகர் சங்கத்தின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து ராதாரவி நீக்கப்பட்டார்.

இதை எதிர்த்து ராதாரவி, உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தொடர்பாக நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி விஷால், உயர் நீதிமன்றத்தில் நேற்று நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் முன்பு ஆஜரானார். அப்போது பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட ஏகோபித்த முடிவின்படியே நடிகர் சங்க அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து ராதாரவி நீக்கப்பட்டார். இதில் நீதிமன்ற உத்தரவை அவமதிக்கும் நோக்கம் இல்லை எனக்கூறி நடிகர் விஷால் விளக்கம் அளித்தார். அதையடுத்து நீதிபதி இந்த வழக்கை வரும் ஜன.18-ம் தேதிக்கு தள்ளிவைத்து, இனி விஷால் நேரில் ஆஜராக தேவையில்லை என விலக்கு அளித்தும் உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x