Published : 07 Dec 2017 10:41 PM
Last Updated : 07 Dec 2017 10:41 PM

வாழ்வைத் திருப்பிய நொடிகள் அவை; இப்போது நலமாக இருக்கிறேன்: கார் விபத்தில் சிக்கிய கவுதம் மேனன் ட்வீட்

வாழ்வைத் திருப்பிய நொடிகள் அவை. இப்போது நலமாக இருக்கிறேன் என்று கார் விபத்தில் சிக்கிய கவுதம் மேனன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

சாலையில் நின்ற டிப்பர் லாரி மீது இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் ஓட்டிச் சென்ற கார் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

இயக்குநர் கவுதம் மேனன் வியாழக்கிழமை அதிகாலை தனது காரில் மாமல்லபுரத்தில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தார். அவர் சென்னை சோழிங்கநல்லூர் ஆவின் பால்பண்ணை அருகே செல்லும்போது, சாலையில் நின்று கொண்டிருந்த டிப்பர் லாரி மீது கவுதம் வாசுதேவ் மேனன் கார் எதிர்பாராமல் மோதியுள்ளார்.

இதில், காரின் முன்பகுதி சேதம் அடைந்துள்ளது. விபத்தில் காரில் இருந்த கவுதம் வாசுதேவ் மேனனுக்கு கையில் லேசான காயம் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அவர் பெரும்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் புறநோயாளியாக சிகிச்சை பெற்றுச் சென்றுள்ளார். விபத்து குறித்து கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

இதுகுறித்து கவுதம் மேனன் தன் ட்விட்டர் பக்கத்தில், ''என் நலன் விரும்பிய , நலம்பெற வாழ்த்திய உள்ளங்களுக்கு நன்றி. வாழ்வைத் திருப்பிய நொடிகள் அவை. இப்போது நலமாக இருக்கிறேன். எச்.சி.எல் நிறுவனத்தில் பணிபுரியும் கோபாலகிருஷ்ணன் செய்த உதவியால் மனிதாபிமானத்தின் மீது பெரும் நம்பிக்கை கொண்டேன். மீண்டும் படப்பிடிப்பு தொடங்க காத்திருக்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x