Last Updated : 26 Dec, 2017 04:37 PM

 

Published : 26 Dec 2017 04:37 PM
Last Updated : 26 Dec 2017 04:37 PM

மறக்க முடியாத சினிமாவை தந்திருக்கிறீர்கள்: மோகன் ராஜாவுக்கு விக்னேஷ் சிவன் வாழ்த்து

மறக்க முடியாத சினிமாவை தந்திருக்கிறீர்கள் என்று 'வேலைக்காரன்' படம் குறித்து மோகன் ராஜாவுக்கு விக்னேஷ் சிவன் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, ஃபகத் பாசில், சதீஷ், ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'வேலைக்காரன்'. அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தை ஆர்.டி.ராஜா தயாரித்திருக்கிறார்.

'வேலைக்காரன்' படத்திற்கு விமர்சன ரீதியிலும், வசூல் ரீதியிலும் பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது.

இப்படம் குறித்து இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

மோகன்ராஜ் சார், உங்கள் மீது நான் வைத்திருக்கும் மரியாதை இன்னும் உயர சென்றுவிட்டது. இப்படி சக்திவாய்ந்த ஒரு படத்தை எடுக்க வேண்டும் என்ற உங்கள் எண்ணமே போதும். பலரது மனங்களை வென்று விட்டீர்கள். அற்புதமான காட்சிகள், சிறப்பான வசனங்கள். சிவாவுக்கும் ஒரு வேலையாளுக்கும் வீட்டுக்குள் நடக்கும் அந்த ஒரு காட்சி போதும், நீங்கள் நினைத்ததை மக்கள் உணர்ந்து புரிந்து கொள்வார்கள். இன்னொரு மறக்க முடியாத சினிமாவை தந்திருக்கிறீர்கள். இப்படியான தைரியமான, அழகான படங்களை எங்களுக்காக தொடர்ந்து கொடுங்கள்.

சிவகார்த்திகேயன் சாரின் சிறந்த நடிப்பு. அந்தக் கதாபாத்திரத்துக்கு உண்மையாக, நேர்மையாக இருந்துள்ளார். கடந்த சில வருடங்களாக எங்களுக்கு பொழுதுபோக்கு தந்துள்ளீர்கள். எங்கள் அனைவருக்கும் உங்களைப் பிடிக்கும். இப்போது உங்கள் மீதி வைத்திருக்கும் மரியாதை வேறொரு தளத்தில் உயர்ந்து சென்றுவிட்டது. வாழ்த்துகள் சார்.

இந்த படம் பற்றி எப்போதும் நீங்கள் பெருமைப்பட்டுக்கொள்ளலாம். அனிருத் சார், நிறைய இடங்களில் புல்லரித்தது, க்ளைமேக்ஸ் பாடலும் அற்புதம். எப்போதும் போல இந்த மேதையை நினைத்து எனக்கு பெருமையே!

இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.

தற்போது 'தானா சேர்ந்த கூட்டம்' பணிகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x