Published : 25 Nov 2017 11:36 AM
Last Updated : 25 Nov 2017 11:36 AM

அன்புசெழியன் ஒதுங்கினால் சினிமா இல்லை: தயாரிப்பாளர் தாணு

அன்பு ஒதுங்கினால், சினிமா இல்லை. அன்புசெழியன் என்பவர் அன்பானவர், பண்பானவர், பாசமானவர், நேசமானவர் என்று தயாரிப்பாளர் தாணு பேசினார்.

கடன் கொடுத்த பிரபல பைனான்சியர் அன்புசெழியன் மிரட்டியதன் காரணமாக சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டர் அசோக்குமார். அவரது தற்கொலை திரைத்துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

பலரும் அன்புசெழியனுக்கு எதிராக குரல் கொடுத்து வந்த நிலையில், ஆதரவாக தயாரிப்பாளர் தாணு பேசியிருப்பதாவது:

அன்புசெழியன் இந்த துறையில் முதலீடு செய்யவில்லை என்றால் நாங்கள் எல்லாம் இல்லை. சிறுபடத் தயாரிப்பாளர்கள் ஒட்டுமொத்தமாக அழிந்தே போவார்கள். ஒவ்வொரு படத்தின் பிரச்சினையையும் சாதாரணமாக முடித்திருக்கிறோம். 'ரஜினிமுருகன்' படப்பிரச்சினையின் போது அனைவருடனும் பேசி, பணத்தையும் குறைத்துக் கொண்டு வெளியிட உதவி செய்தவர் அன்புசெழியன்.

'உத்தமவில்லன்' வெளியீட்டு பிரச்சினையின் போது, மதுரையிலிருந்து கிளம்பி வந்தார். ஒரு சாலையின் ஓரத்தில் படத்தை வெளியிட வேண்டும் என்று மொத்த பிரச்சினையையும் சொன்னோம். என்ன செய்ய வேண்டும் சொல்லுங்கள் என கேட்டு, அனைத்தையும் சரி செய்து கொடுத்தார். நான் தயாரித்த பெரிய படங்கள், சிறு படங்கள் என அனைத்துக்குமே அவர் தான் பணம் கொடுத்திருக்கிறார். அன்பு மீது இப்படியொரு பழியா என்பதை நினைக்கும் போது வேதனையாக இருக்கிறது.

இயக்குநர்கள் சங்கம், தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் நடிகர் சங்கம் என மூன்றிலுமே சசிகுமார் உறுப்பினார். அந்த மூன்று தலைவர்களையும் அழைத்து அன்புசெழியனிடம் பேசினால் பிரச்சினை எளிதாக முடிந்துவிடப் போகிறது. பல பைனான்சியர்களிடம் பேசி எத்தனை படங்களை வெளியிட்டு இருக்கிறோம். ஏதாவது ஒரு படம் அன்புவால் நின்றிருக்கிறதா என்றால் சத்தியமாக கிடையாது. அப்படிப்பட்டவர் மீது ஏன் இப்படியொரு பழி. இதற்கு பின்னணியில் ஏதோ ஒரு காரணம் இருக்கிறது.

அன்புசெழியனை தவறாக சித்தரித்து இந்த தொழிலை நசுக்கி விடக்கூடாது. நெக்டிவ் ரைட்ஸுக்கு கொடுக்கக்கூடிய பணம் சம்பளத்திற்கு போய்விடும். மீதி பணத்தைக் கொடுக்க கூடியவர் அன்பு. அவர் ஒதுங்கிவிட்டார் என்றால், இடைநிலை தயாரிப்பாளர்கள் யாருமே படம் எடுக்க முடியாது. நடிகர்களே பணத்தைப் போடு, படம் எடுத்துக் கொள்ள வேண்டியதுதான்.

அன்பு பைனான்சியர் மட்டுமல்ல, அவர் ஒரு விநியோகஸ்தர். 'தங்கமகன்' பட நஷ்டமாகிவிட்டது என்பதற்காக ஸ்ரீக்ரீன் நிறுவனத்திற்கு 2 கோடி விட்டுக் கொடுத்தவர் அன்பு. அப்படியொரு ஒரு ஈகை குணம் கொண்டவர். எந்தவொரு சூழ்நிலையிலும் இந்த திரையுலகை விட்டு அன்பு ஒதுங்கிவிடக் கூடாது. அன்பு ஒதுங்கினால், சினிமா இல்லை. அன்புசெழியன் என்பவர் அன்பானவர், பண்பானவர், பாசமானவர், நேசமானவர், உண்மையான ஒரு பையன்.

அசோக்குமாரின் குடும்பத்துக்கு உதவ வேண்டும் என்று சுரேஷ் காமாட்சி பேசினார். நான் முதலீடு செய்து படம் தயாரிக்கிறேன். சசிகுமார் அல்லது விஷால் நடிக்கட்டும். அந்தப் பணம் அசோக்குமாரின் குடும்பத்துக்கு போய் சேரட்டும்.

இவ்வாறு தாணு பேசினார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x