Last Updated : 12 Nov, 2017 01:00 PM

 

Published : 12 Nov 2017 01:00 PM
Last Updated : 12 Nov 2017 01:00 PM

தள்ளிப்போகும் 24-ம் புலிகேசி: வடிவேலு காரணமா?

நடிகர் வடிவேலு கடந்த 2006-ல் இயக்குநர் ஷங்கர் தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கிய ‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி’ படத்துக்குப் பிறகு ஹீரோ என்ற தனித்த அடையாளத்தைப் பெற்றார். இதற்கிடையே அரசியல் பிரச்சாரம் உள்ளிட்ட சில பிரச்சினைகளால் சினிமாவில் அவருக்கு சிறு இடைவெளி விழுந்தது. இவற்றைக் கடந்து, ‘தெனாலிராமன்’, ‘எலி’ ஆகிய படங்களில் நாயகனாக நடிக்கவும் செய்தார். இதன் தொடர்ச்சியாக மீண்டும் இயக்குநர் ஷங்கர் தயாரிப்பில் சிம்புதேவன் இயக்க, வடிவேலு நடிப்பில் ‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ படத்தின் அறிவிப்பு வந்தது.

முதல் கட்டமாக சென்னையில் பிரம்மாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு வேலைகளும் தொடங்கியது. ஆனால், தொடங்கிய 8 நாட்களிலேயே காஸ்ட்யூம் விவகாரத்தால் படவேலைகள் நிற்கின்றன. இதுகுறித்து விசாரித்தபோது, கோலிவுட் வட்டாரங்கள் கூறியதாவது:

வடிவேலுவின் போட்டோஷூட்டுக்காக பணியாற்றிய ஆடை வடிவமைப்பாளர் மீது படக்குழுவினருக்கு திருப்தி இல்லை. அதனால், அவருக்கு ஒரு தொகையைக் கொடுத்து படத்தில் இருந்து விலகிக்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளனர். வடிவேலுவும் இதற்கு ஒப்புக்கொண்டார். படப்பிடிப்பும் மீண்டும் தொடங்கியது. ஒரு வாரம் ஆன நிலையில், ‘அதே காஸ்டியூமரை நியமித்தால்தான் படப்பிடிப்புக்கு வருவேன்’ என்று வடிவேலு கூறியுள்ளார். தற்போது இதுகுறித்து இரு தரப்புக்கும் பேச்சு நடக்கிறது என்கிறது கோலிவுட் வட்டாரம். வடிவேலு தரப்பில் விசாரித்தபோது, ‘விரைவில் பேசுவோம். தற்போது எதுவும் சொல்வதற்கில்லை’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x