

கொச்சி: தான் இயக்கிய முதல் படம் ரிலீஸுக்கு தயாரான நிலையில் இயக்குநர் உயிரிழந்திருப்பது கேரள திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
மலையாள சினிமாவில் சுமார் 45 படங்களுக்கு மேல் தயாரிப்பு நிர்வாகியாக பணியாற்றியவர் பைஜு பரவூர் (42). இவர் தக்ஷ், சினேகா நடிப்பில் ‘சீக்ரெட்ஸ்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். இதன் மூலம் அவர் இயக்குநராக அறிமுகமாக இருந்தார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து வந்தன.
இந்நிலையில் படத்தின் பணியை முடித்துவிட்டு கோழிகோடில் இருந்து குன்னம்குளத்தில் உள்ள மனைவி வீட்டுக்கு சனிக்கிழமை காரில் திரும்பிக் கொண்டிருந்தார். வழியில் உணவகம் ஒன்றில் சாப்பிட்டார். வீட்டுக்கு வந்ததும் உடல் நிலை சரியில்லாமல் போனதால் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின் கொச்சிக்கு மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி திங்கட்கிழமை உயிரிழந்தார். அவர் மறைவுக்கு மலையாளத் திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.