Published : 23 Jun 2023 09:07 PM
Last Updated : 23 Jun 2023 09:07 PM

“போதைப்பொருட்களில் ஆர்வம் காட்டாதீர்கள்” - இளைஞர்களுக்கு நடிகர் கார்த்தி அறிவுரை

சென்னை: “நாம் எல்லோரும் ஒன்றிணைந்தால் போதைப்பொருட்கள் பயன்பாட்டை தடுக்க முடியும். இது சீரியஸான விஷயம். போதைப்பொருட்களில் ஆர்வத்தை காட்டுவதற்கு பதிலாக இளைஞர்கள் விளையாட்டுப் போட்டிகளில் ஆர்வத்தை செலுத்த வேண்டும்” என நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்.

சென்னை மெரினா கடற்கரையில் போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் கார்த்தி, “இன்றைய காலக்கட்டத்தில் போதைப்பொருட்கள் அதிக அளவில் புழங்கி வருகின்றன. இதனை பயன்படுத்தும் இளைஞர்களின் வயது வரம்பும் குறைந்துகொண்டே வருகிறது. முன்பெல்லாம் கல்லூரி படிக்கும் இளைஞர்கள் மது அருந்தினர். இப்போது பள்ளி மாணவர்களும் போதைப்பொருளுக்கு அடிமையாகிவிட்டனர்.

பள்ளிகளுக்கு அருகே கூட போதைப்பொருட்கள் சகஜமாக விற்கப்படுகின்றன. போதைப்பொருள் பயன்படுத்துபவர்கள் நம்மிடையே இருப்பவர்கள்தான். அதனை விற்பவரும், புழக்கத்தில் விடுபவரும் நம்மிடையே இருப்பவர்கள்தான். ஆக, நாம் எல்லோரும் ஒன்றிணைந்தால் போதைப்பொருட்களின் பயன்பாட்டை தடுக்க முடியும்.மாற்றத்தை கொண்டு வர முடியும்.

இது சீரியஸான விஷயம். போதைப்பொருட்களில் ஆர்வத்தை காட்டுவதற்கு பதிலாக இளைஞர்கள் விளையாட்டுப் போட்டிகளில் ஆர்வத்தை செலுத்த வேண்டும். பெற்றோர்கள் தான் இளைஞர்களின் நண்பனாக இருக்க வேண்டும். போதைப்பொருள் பயன்படுத்தும் இளைஞர்கள் மகிழ்ச்சி, சோகம் என எல்லா தருணங்களிலும் பயன்படுத்துவதாக கூறுகின்றனர். பெற்றோர்கள் பிள்ளைகளை கவனித்து நண்பர்களாக வழிநடத்த வேண்டும்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x