Published : 24 Oct 2017 07:00 PM
Last Updated : 24 Oct 2017 07:00 PM
கருத்துரிமை, விவசாயிகள், தாஜ்மஹால் ஆகியவை குறித்து பிரகாஷ்ராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் காட்டமாக பதிவிட்டு இருக்கிறார்.
பெங்களூருவில் கவுரி லங்கேஷ் படுகொலை குறித்து கருத்துகளைத் தெரிவித்து சர்ச்சையில் சிக்கினார் நடிகர் பிரகாஷ்ராஜ். தேசிய விருது தொடர்பான கருத்துகள் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியானதால் அதனை மறுத்து வீடியோ பதிவொன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.
இந்நிலையில் கருத்துரிமை, கைவினைக் கலைஞர்கள், தாஜ்மஹால் ஆகியவை குறித்து பிரகாஷ்ராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் காட்டமாக பதிவிட்டு இருக்கிறார்.
கைவினைக் கலைஞர்கள் குறித்து கூறுகையில், ''இயந்திரக் கலாச்சாரம் நமது கைவினைக் கலைஞர்களை சந்தைக்கு அடிமைகளாக மாற்றியுள்ளது. ஜிஎஸ்டி அவர்களை அழிக்கிறது. உங்கள் அடுத்த நவம்பர் கூட்டத்தில் அவர்களுக்கு 0% சதவித ஜிஎஸ்டி பற்றி பரிசீலனை செய்வீர்களா? இல்லையென்றால் கிராமத்தில் இருப்பவர்களுக்காகவாவது 0% சதவித ஜிஎஸ்டி என உத்தேசிக்க முடியுமா?'' என்று பிரகாஷ்ராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.
கருத்துரிமை குறித்து கூறுகையி, ''எனது கருத்துக்கு மாற்றுக் கருத்து சொல்ல அனைவருக்கும் உரிமை உண்டு. ஆனால் தொடர்ந்து என்னை கிண்டல் செய்பவர்களின் மொழி அருவருப்பாக இருக்கிறது. உங்களின் ஒவ்வொரு வசையும் எனது கருத்துகளை சொல்ல என்னை வலுவாக்குகிறது. நீங்கள் ஒளிந்திருக்கும் முகமூடிக்குப் பின்னால் உங்கள் முகத்தை தெளிவாகப் பார்க்க முடிகிறது'' என்றார் பிரகாஷ்ராஜ்.
தாஜ்மஹால் குறித்து பிரகாஷ்ராஜ் கூறுகையில், ''தாஜ்மகாலின் அஸ்திவாரத்தை நீங்கள் தோண்ட ஆரம்பித்துவிட்டீர்கள். அதை எப்போது இடிப்பதாகத் திட்டம்? சொல்லிவிட்டால் கடைசியாக எங்கள் குழந்தைகளுக்கு ஒருமுறை காட்டிவிட்டு வருவோம்'' என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT