Last Updated : 21 Oct, 2017 01:33 PM

 

Published : 21 Oct 2017 01:33 PM
Last Updated : 21 Oct 2017 01:33 PM

மெர்சல் சர்ச்சை குறித்து திரையுலகப் பிரபலங்கள் கூறியுள்ளது என்ன?

விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள 'மெர்சல்' படத்தால் ஏற்பட்டுள்ள சர்ச்சை குறித்து திரையுலகப் பிரபலங்கள் கூறியுள்ள கருத்துகளின் தொகுப்பு

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் 'மெர்சல்'. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்துக்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்திருந்தார். தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்து வெளியிட்டு இருக்கிறது.

ஜிஎஸ்டி தொடர்பான வசனங்களுக்கு பாஜக கட்சித் தலைவர்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்து வருகிறார்கள். சமூக வலைதளத்தில் படத்தின் காட்சிகளை நீக்கக் கூடாது என்று பலரும் தெரிவித்து வரும் நிலையில், 'மெர்சல்' படத்துக்கு ஆதரவாக திரையுலகினர் பலரும் ஆதரவுக் குரல் கொடுத்து வருகிறார்கள். அவற்றின் தொகுப்பு:

ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம்: மெர்சல் பேச்சு சுதந்திரத்தின் கழுத்து நெறிக்கப்படுகிறது.

தனஞ்ஜெயன்: சில அரசியல்வாதிகள் உருவாக்கிய சர்ச்சைகளுக்கு நன்றி. மெர்சல் படம் பற்றி முழு பக்க செய்திகள் நாளிதழில் வந்திருக்கின்றன.

அரவிந்த்சாமி: வரிகளை ஒன்றாக்கியதன் மூலம் ஜிஎஸ்டி மக்களின் பங்களிப்பு என்ன என்பதை உணர வைத்துள்ளது. மக்கள் தங்களுக்கு செய்ய வேண்டியதை அரசாங்கத்திடம் கேட்கத்தான் செய்வார்கள். அதில் என்ன தவறு?

அன்பழகன்: மெர்சல் படம் மிக நன்றாக உள்ளது. சமுதாயத்திற்கு தேவையான பல கருத்துகள் உள்ளன. மெர்சலை பார்த்து மத்திய, மாநில அரசுகள் மிரண்டு போயுள்ளன.

இயக்குநர் சாம் ஆண்டன்: மெர்சல் - ஜிஎஸ்டி குறித்த மக்களின் கருத்துகளை தைரியமாக பேசியதற்கு விஜய் அண்ணாவுக்கும், மக்களின் குமுறலை எழுதிய இயக்குநர் அட்லிக்கும் என் வணக்கங்கள். மற்ற மாநிலங்களை விட, ஒரே ஒரு மாநில மொழியைச் சேர்ந்த ஒரு படம் ஒட்டு மொத்த தேசத்துக்காகப் பேசியுள்ளது. பெருமையான தமிழன் நான். என் பெயர் சாம். நான் ஒரு இந்தியன்.

ஸ்ரீதிவ்யா: இந்த முட்டாள்தனமான செயலை நிறுத்துங்கள். மெர்சல் நல்ல மெஸேஜை சொல்லியிருக்கும் ஒரு படம். அதை யாரும் வெட்டக் கூடாது.

விநியோகஸ்தர் சக்திவேலன்: மீண்டும் சென்சார் செய்வதை விட மீண்டும் தேர்தல் வைத்தால் அது நமக்கு நல்லதை செய்யும்

சிரிஷ்: இந்த ஆட்சியல் கருத்து சுதந்திரம் இருக்கு என இன்னும் நம்பிக்கொண்டிருக்கும் அனைவருக்கும் ஒரு நிமிட மவுன அஞ்சலி.

ஆர்.ஜே பாலாஜி: அரசாங்கம், அரசியல்வாதிகள், கொள்கைகள், சினிமா என பொதுவில் இருக்கும் அனைத்தும் கேள்வி கேட்கப்படும், விமர்சிக்கப்படும். அதை தடுக்க நினைப்பது வெட்கக்கேடானது.

ஸ்ரீப்ரியா: ஒரு நடிகர் இயக்குநர் எழுதிய வசனத்தையே பேசுவார். இதுவே உலக நியதி. அதற்கு அந்த நடிகரிடம் மட்டும் விளக்கம் கேட்பதில் எந்த நியாயமுமில்லை.

சிபிராஜ்: பட விவாதத்தின் போது கட்சியை சேர்ந்த ஒருவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று விதி விதிப்பார்கள் என நினைக்கிறேன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x