Published : 16 Aug 2014 04:14 PM
Last Updated : 16 Aug 2014 04:14 PM

தோனி செய்ய முடிந்ததை மற்ற பேட்ஸ்மென்கள் செய்ய முடியவில்லை: கவாஸ்கர்

ஓவல் டெஸ்ட் போட்டியில் இந்திய பேட்டிங் வரிசை மீண்டும் இங்கிலாந்து பந்து வீச்சிடம் சரணடைந்தது பற்றி கவாஸ்கர் தனது விமர்சனங்களைத் தெரிவித்துள்ளார்.

நேற்று மீண்டும் கேப்டன் எம்.எஸ்.தோனி, தனது குறைவுபட்ட உத்தியிலும் கூட அடிப்படையான பேட்டிங் பொறுமையையும், புத்தி கூர்மையையும் காண்பித்து 82 ரன்களை எடுத்து கடைசியாக ஆட்டமிழந்தார்.

மற்ற பேட்ஸ்மென்களோ செய்த தவறையே திரும்பவும் செய்ததாக சுனில் கவாஸ்கர் மற்றும் விவிஎஸ்.லஷ்மண் ஆகியோர் கருதுகின்றனர்.



சுனில் கவாஸ்கர் இது பற்றி தனியார் சானலில் கூறும்போது:

"முக்கிய விக்கெட்டுகள் விழுந்த விதத்தைப் பாருங்கள், அவையெல்லாம் அபாரமான பந்துகளில் விழுந்த விக்கெட்டுகள் அல்ல. ஷாட் அடிக்கக் கூடாத பந்தை ஷாட் அடித்தனர். பெரிய ஷாட்களை ஆட முடியாத நிலையில் அவ்வகையான ஷாட்களுக்குச் சென்றனர். பொறுமை மிக மிக முக்கியம். இது 5 நாள் போட்டி முதல் நாள் முழுதும் மறுநாள் உணவு இடைவேளை வரையிலாவது ஒரு அணி பேட்டிங் செய்யவேண்டும். முதல் நாளிலேயே சுருண்டால் டெஸ்ட் போட்டியை தோல்வியிலிருந்து எப்படிக் காப்பாற்ற முடியும்?

விடலைகளை வீரர்கள் என்பதிலிருந்து பிரித்துப் பார்க்க உதவும் அளவுகோல் பொறுமை. இந்திய வீரர்களுக்குப் பொறுமை இல்லை. தோனிக்கு கிரிக்கெட் பேட்டிங் உத்திகள் அத்துப்படியில்லை. ஆனாலும் அவர் அடிப்படையில் ஒன்று செய்தார். ஆட வேண்டிய பந்தை ஆடினார். மற்ற பந்துகளை ஆடாமல் விட்டார். இதுதான் தோனி செய்தார். இதைத்தான் மற்ற வீரர்களும் செய்திருக்க வேண்டும்” என்றார்.

தோனி இந்தத் தொடரில் 349 ரன்களை எடுத்துள்ளார். ஒரு டெஸ்ட் தொடரில் இவர் எடுக்கும் அதிகபட்ச ரன்கள் இதுவே. இதற்கு முன்னர் ஆஸ்ட்ரேலியாவுக்கு எதிராக இந்தியாவில் 326 ரன்கள் எடுத்ததே அதிகம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x