Published : 24 Jan 2023 05:03 AM
Last Updated : 24 Jan 2023 05:03 AM

பாதுகாப்பு பணியின் சிறப்பு அம்சம் என்பது நமக்கான வாழ்க்கை முறையையும் தேர்வுசெய்து தருவதே - துறை சார்ந்த அதிகாரிகள் பெருமிதம்

சென்னை: வெறும் வேலைவாய்ப்பு சார்ந்த பணி மட்டுமல்ல; நமக்கான வாழ்க்கை முறையையும் தேர்வுசெய்து தருவதே பாதுகாப்பு பணியின் சிறப்புக்குரிய செயலாகும் என்று துறை சார்ந்த அதிகாரிகள் பெருமிதத்தோடு கூறினர்.

10, 11, 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள், கல்லூரியில் இளங்கலை மற்றும் முதுகலை படிக்கும்மாணவர்களுக்கு இந்திய ராணுவம், விமானப்படை, கப்பற்படை உள்ளிட்ட தேசத்தின் பாதுகாப்புத்துறையிலுள்ள வேலைவாய்ப்புகளை அறிய செய்யும் நோக்கில் ‘இந்து தமிழ் திசை’ சார்பில் ‘தேசம் காக்கும் நேசப் பணிகள்’ எனும் வெப்பினார் தொடர் நிகழ்வு நடத்தப்பட்டது. இந்நிகழ்வை சாய்ராம் கல்வி நிறுவனமும், ஆர்.எம்.கே. கல்வி நிறுவனமும் இணைந்து வழங்கின.

இந்த இணையவழி தொடர் நிகழ்வின் 3-ம், 4-ம் பகுதிகள் கடந்த சனி, ஞாயிறு (ஜன. 21, 22) ஆகியஇரு நாட்கள் நடைபெற்றன. இந்தநிகழ்வில் துறை சார்ந்த சிறப்பு வல்லுநர்கள் பங்கேற்று, அத்துறைகளிலுள்ள வேலைவாய்ப்புகளைப் பற்றி கலந்துரையாடினர்.

இந்திய விமானப் படையின் ஓய்வுபெற்ற விங் கமாண்டர் ஏ.சதீஷ்குமார், ‘இந்திய விமானப் படையிலுள்ள வேலைவாய்ப்புகள்’ எனும் தலைப்பில் பேசியதாவது; பொள்ளாச்சி அருகேயுள்ள கிராமமொன்றில் பிறந்து, அதே கிராமத்தில் இருந்த அரசுப் பள்ளியில் படித்தேன். எனது ஆசிரியர் மூலமாக அமராவதி நகரிலுள்ள மத்திய அரசும், தமிழக அரசும் இணைந்து நடத்திய பள்ளியில் படிக்கும்போது, விமானப் படையில் நாமும் பணியாற்ற வேண்டும் என்ற எண்ணம் உண்டானது. ஆர்வமும் முயற்சியும் இருந்தால் நிச்சயம்விமானப்படை பணியில் சேரலாம்.

விமானப்படை என்பது தனி உலகம் போன்றது. அதில் பல பிரிவுகள்உள்ளன. ஏராளமான வேலைவாய்ப்புகளும் அதில் கொட்டிக் கிடக்கின்றன. பன்முகம் கொண்ட விமானப்படையில் ஆண், பெண்இருபாலருக்குமான பல பிரிவுவேலைகள் உள்ளன. தலைமைஅதிகாரி, ஏர்மேன், சமையல் பணிசெய்வோர், தூய்மைப்படுத்துவோர் என பல நிலைகளிலான பணிகள் உள்ளன. ட்ரோன் எனப்படும் ஆளில்லா விமானம் இன்றைக்கு புகைப்படத் துறை, விவசாயத் துறையில் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது. வெறும் வேலைவாய்ப்பு சார்ந்த பணி மட்டுமல்ல; நமக்கான வாழ்க்கை முறையையும் தேர்வுசெய்து தருவதே பாதுகாப்பு பணியின் சிறப்புக்குரிய செயலாகும் என்றார்.

மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையின் ஓய்வுபெற்ற உதவி கமாண்டண்ட் என்.வெங்கட ராஜூ,‘மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையில் (CISF) உள்ள வேலைவாய்ப்புகள்’ எனும் தலைப்பில் பேசியதாவது; மத்திய பாதுகாப்புப் படையானது தொழிலகங்களுக்கான பாதுகாப்பு என்று தான் முதலில் தொடங்கப்பட்டது. பிறகு முக்கிய தலைவர்களுக்கான பாதுகாப்பு, துறைமுகங்களுக்கான பாதுகாப்பு, விமான நிலையப் பாதுகாப்பு, அணுமின் நிலையப் பாதுகாப்பு என இன்றைய மிகப்பெரிய பிரிவாக வளர்ந்திருக்கிறது. தொடக்கத்தில் 3,129 பணியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்த பாதுகாப்புப் படையில் இன்று ஒரு லட்சத்து 71 ஆயிரத்து 635 பேர் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்த பாதுகாப்புப் படைப் பிரிவில் 10, 12-ம் வகுப்பு படித்தவர்கள் முதல் ஏதேனும் ஒரு பட்டப் படிப்பு முடித்தவர்கள் வரைஅனைவருக்குமான வேலைவாய்ப்புகள் உள்ளன. இதில் பணியில் சேருவதற்கு சான்றிதழ் சரிபார்ப்பு உள்ளிட்ட வழக்கமான நடைமுறைகளோடு, உடல் தகுதித் தேர்விலும் வெற்றிபெற வேண்டும். தமிழகத்தில் சென்னை, அரக்கோணம், சேலம், நெய்வேலி, தூத்துக்குடி, கல்பாக்கம் உள்ளிட்டபல இடங்களிலும் மத்திய பாதுகாப்புப் படையில் பணி செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன.

இந்த இரு வெப்பினார் நிகழ்வுகளை ராணுவ விஞ்ஞானியும் அறிவியல் எழுத்தாளருமான டாக்டர் வி.டில்லிபாபு ஒருங்கிணைத்து, கலந்துரையாடியபோது கூறியதாவது; விமானப்படையின் பணியென்பது நமது தேசத்தின் பாதுகாப்புக்காக போர்த்தொழில் புரிவது மட்டுமல்ல; இந்திய மாநிலங்களில் ஏற்படும் இயற்கை பேரிடர் காலங்களில் விரைந்து சென்று மக்களின் உயிர், உடைமைகளை மீட்கும் பணிகளையும் விமானப்படை செய்து வருகிறது. சென்னையில் பெருவெள்ளம் ஏற்பட்டபோது, இந்திய விமானப்படை உடனடியாக களத்தில் இறங்கி, பாதிக்கப்பட்ட மக்களை மீட்டெடுத்தது. ஹெலிகாப்டர் மூலமாக மக்களுக்கு உணவுப் பொட்டலங்களை வழங்கியது. விமானப்படை என்றதுமே போர்முனையில் நின்று குண்டுகளை எறிய வேண்டும் என்றுமட்டும் எண்ணிவிட வேண்டாம். விண்ணில் பறந்து பூமழை பொழியும் விமானப் பணிகளும் உண்டு என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையில் சீருடை அணிந்த, சீருடை அணியாத என இரு பிரிவுகள் உண்டு. மத்திய உள்துறை அமைச்சகத்தின்கீழ் வரும் இந்த பாதுகாப்புப் படையின் பல்வேறு பணிகளில்சேர்ந்து துப்பாக்கி ஏந்திய பாது காவலர் தொடங்கி, பல்வேறு உயர்ந்த பொறுப்புகளை அடையலாம்.

இந்நிகழ்வை ‘இந்து தமிழ் திசை’ முதுநிலை உதவி ஆசிரியர் மு.முருகேசன் தொகுத்து வழங்கினார். இந்த இரு நாள் நிகழ்வுகளையும் தவற விட்டவர்கள் https://www.htamil.org/Session3, https://www.htamil.org/Session4 என்ற லிங்குகள் மூலம் பார்த்துப் பயன்பெறலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x