

சென்னை: ஆயுள் காப்பீடு, கிராம அஞ்சல் ஆயுள் காப்பீடு விற்பனைக்கான முகவர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
சென்னை மத்திய கோட்டம், முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பில், அஞ்சல் ஆயுள் காப்பீடு,கிராம அஞ்சல் ஆயுள் காப்பீடு விற்பனைக்காக புதிய முகவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான நேர்காணல் வரும் 23-ம் தேதி காலை 10 மணிக்கு, எண் 2, சிவஞானம் சாலை, தியாகராய நகர், சென்னை 600017 (பாண்டி பஜார் அருகில்) என்ற முகவரியில் உள்ள சென்னை மத்தியகோட்ட முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. கல்வித் தகுதி குறைந்தது 10-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு 18-லிருந்து 50-க்குள் இருக்க வேண்டும். சுய தொழில் செய்பவர்கள், வேலையில்லா இளைஞர்கள், காப்பீட்டு நிறுவனத்தில் பணிபுரிந்த முன்னாள் காப்பீட்டு ஆலோசகர்கள் மற்றும் முகவர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், சுய உதவிக்குழு உறுப்பினர்கள், முன்னாள் ராணுவத்தினர், ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் ஆகியோர் விண்ணப்பிக்கலாம்.
மேலும், ஆயுள் காப்பீடுகளை விற்பனைசெய்வதில் முன்அனுபவம் பெற்றிருப்ப தோடு, கணினிப் பயிற்சியும், சொந்தப் பகுதி பற்றி நன்கு அறிந்தவர்களாகவும், சென்னை மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாகவும் இருக்க வேண்டும்.
இதர ஆயுள் காப்பீட்டு அலுவலகத்தில் முகவர்களாக இருப்பவர்கள், இப்பணிக்கு விண்ணப்பிக்கத் தகுதியில்லை.
மேற்கண்ட தகுதியுடையவர்கள், 3 பாஸ்போர்ட் அளவு புகைப்படம், அசல் மற்றும் இரண்டு நகல் - வயது, முகவரி, மற்றும் கல்விச் சான்றுகளை உடன் கொண்டுவர வேண்டும்.
முகவர்களாக தேர்வு செய்யப்படுபவர்கள் பிடிக்கும் பாலிசியின் பிரீமியம் அடிப்படையில் ஊக்கத் தொகை, கமிஷன் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.