Published : 10 Jan 2023 04:11 AM
Last Updated : 10 Jan 2023 04:11 AM

தேசப் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவோருக்கு சமூகத்தில் மதிப்பு, மரியாதை

என்.செல்வகுமார்

சென்னை: ‘‘பாதுகாப்புத் துறையில் பணியாற்றுவது வெறும் வேலைவாய்ப்பு சார்ந்தது மட்டுமல்ல; அப்பணியால் சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் கிடைக்கும்’’ என்று துறைசார்ந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

10, 11, 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள், கல்லூரி மாணவர்களுக்கு இந்திய ராணுவம், விமானப்படை, கப்பற்படை உள்ளிட்ட தேசத்தின் பாதுகாப்புத் துறையிலுள்ள வேலைவாய்ப்புகளை அறியச் செய்யும் நோக்கில் ‘இந்து தமிழ் திசை’ சார்பில் ‘தேசம் காக்கும் நேசப் பணிகள்’ எனும் வெப்பினார் தொடர் நிகழ்வை நடத்தியது. இந்நிகழ்வை சாய்ராம் கல்வி நிறுவனமும் இணைந்து வழங்கியது.

இந்த இணையவழி தொடர் நிகழ்வின் முதல் 2 பகுதிகள் கடந்த சனி, ஞாயிறு (ஜன.7, 8) நடைபெற்றது. இந்த நிகழ்வில் துறைசார்ந்த சிறப்பு வல்லுநர்கள் பங்கேற்று, அத்துறைகளிலுள்ள வேலைவாய்ப்புகளைப் பற்றி கூறியதாவது:

‘இந்திய ராணுவத்திலுள்ள வேலைவாய்ப்புகள்’ எனும் தலைப்பில் இந்திய ராணுவத்திலிருந்து ஓய்வுபெற்ற கர்னல் என்.செல்வகுமார் கூறியதாவது:

நான் படித்த அமராவதி புதூர் பள்ளியில் கம்பீரத்துடன், மிடுக்குடன் வலம்வரும், ராணுவத்தில் பணியாற்றிய முன்னாள் வீரர்களைப் பார்க்கும்போது எனக்கும் ஆர்வம் வந்தது. ராணுவப் பணி என்பது துப்பாக்கி ஏந்தி, நாட்டின் எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவது மட்டுமே என்று பலரும் நினைக்கிறார்கள். அதுமட்டுமல்ல, பல பிரிவுகளில் தேசப் பாதுகாப்பு துறையில் பணியாற்றும் வாய்ப்புகள் உள்ளன. ராணுவத்தில் பணியாற்றுவது என்பது வெறும் வேலைவாய்ப்பு சார்ந்தது மட்டுமல்ல; தேசப் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவோருக்கு சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் கிடைக்கும்.

10, 12-ஆம் வகுப்பு படித்தவர்கள், இன்ஜினீயரிங், மருத்துவம், சட்டம், ஐடிஐ, பாலிடெக்னிக்கில் படித்தவர்கள் என அனைவருமே தேசப் பாதுகாப்பு பணியில் பணியாற்றலாம். இன்றைக்கு ராணுவத்தின் அனைத்து பணிகளிலும் பெண்களும் பங்கேற்கும் வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

‘இந்திய உளவு நிறுவனங்களிலுள்ள வேலைவாய்ப்புகள்’ எனும் தலைப்பில் இந்திய வருவாய் துறையின் ஓய்வுபெற்ற அதிகாரி சாய்கிருஷ்ணா கூறியதாவது:

இன்டலிஜென்ஸ் பீரோ (IB), ரிசர்ச் அனாலிஸ் விங்க் (RAW), நேஷனல் டெக்னிக்கல் ரிசர்ச் ஆர்கனைசேஷன் (NTRO) உள்ளிட்டதேசப் பாதுகாப்புக்கான உளவுத்துறையில் பணி செய்பவர்களைச் சீருடை அணியாத நாயகர்கள் என்று சொல்வார்கள்.

இந்திய உளவுத்துறைக்கு உள்ளே இருந்தும், வெளியே இருந்தும் பணிசெய்யும் பல வாய்ப்புகள் உள்ளன. ஏதேனும் ஒரு பட்டப்படிப்பும், அதில் 65 சதவீத மதிப்பெண்ணும் பெற்றிருக்க வேண்டும். நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்புக்குப் பிறகு அவர்கள் தேர்வு செய்யப்படுவர். உளவுத்துறையில் உதவியாளர் தொடங்கி, ஜூனியர் லெவல் அதிகாரி, சீனியர் ஃபீல்டு அதிகாரி என பல நிலைகளிலும் பணி வாய்ப்புகள் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

இந்த இரு வெப்பினார் நிகழ்வுகளையும் ஒருங்கிணைத்த ராணுவ விஞ்ஞானியும் அறிவியல் எழுத்தாளருமான டாக்டர் வி.டில்லிபாபு கூறியதாவது;

இந்திய ராணுவத்தில் பணியாற்றி, தேசப் பாதுகாப்புக்கு மகத்தான சேவையாற்றிய பல ராணுவ உயர் அதிகாரிகளைப் பெற்ற பெருமை தமிழ்நாட்டுக்கு உண்டு. இந்திய ராணுவத்திலும், உளவுத்துறையிலும் பல்வேறு பிரிவுகளில் உள்ள எண்ணற்ற வேலைவாய்ப்புகளை தெரிந்துகொள்வதன் மூலமாக நமக்கு விருப்பமான தேசப் பாதுகாப்புத் துறையின் ஏதேனும் பிரிவில் பணியாற்றவும், சேவை செய்யவுமான வாய்ப்பு கிடைக்கும்.

தேசத்தின் பாதுகாப்பில் நானும் இணைந்துள்ளேன் என்று பெருமையாகச் சொல்லிக்கொள்ளும் ராணுவ வீரர்களை தமிழ்நாட்டு மக்கள் மிகுந்த மரியாதையுடனும் நேசத்துடனும் பார்க்கின்றனர். இந்த வெப்பினார், தேசப்பாதுகாப்பு துறையிலும், உளவுத்துறையிலும் உள்ள பலரும் அறிந்திராத பிரிவுகளைப் பற்றியும் வேலைவாய்ப்புகளைப் பற்றியும் தெரிந்துகொள்ளும் வகையில் அமைந்துள்ள பயனுள்ள நிகழ்வாகும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்வை ‘இந்து தமிழ் திசை’ பொதுமேலாளர் டி.ராஜ்குமார் தொடங்கி வைத்தார். முதுநிலை உதவி ஆசிரியர் மு.முருகேசன் தொகுத்து வழங்கினார்.

இந்த 2 நாள் நிகழ்வுகளையும் தவற விட்டவர்கள் https://www.htamil.org/Session1, https://www.htamil.org/Session2 என்ற லிங்க்குகளில் பார்த்துப் பயன்பெறலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x