Published : 23 Nov 2022 04:25 AM
Last Updated : 23 Nov 2022 04:25 AM

சேலத்தில் நவ.26-ல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்: 40,000 காலிப் பணியிடங்களை நிரப்ப திட்டம்

மாவட்ட ஆட்சியர் கார்மேகம்

சேலம்: சேலத்தில் அமைச்சர் கே.என்.நேரு தலைமையில், 26-ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. முகாமில், 40 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்ப திட்டமிடப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சேலம் மாவட்டத்தில் உள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில், மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் ஆகியவை சார்பில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 26-ம் தேதி நடத்தப்படுகிறது.

நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில், சேலம் பத்மவாணி கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது.

இம்முகாமில் உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம், ஜவுளி, வங்கி சேவைகள், காப்பீடு, மருத்துவம், கட்டுமானம் உள்ளிட்ட முக்கிய துறைகளில் இருந்து 300-க்கும் மேற்பட்ட முன்னணி வேலையளிக்கும் நிறுவனங்கள் 40,000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு பணியாளர்களைத் தேர்வு செய்ய உள்ளனர். மேலும், இம்முகாமில் 20,000-க்கும் மேற்பட்ட வேலைநாடுநர்களும் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறவிருக்கும் இம்முகாமில் 8-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு, பிளஸ் 2, ஐ.டி.ஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு, பொறியியல், செவிலியர், ஆசிரியர், தொழிற்கல்வி போன்ற அனைத்து விதமான கல்வித்தகுதி உள்ளவர்களும் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

இம்முகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ள வேலையளிக்கும் நிறுவனங்களும், வேலைநாடுநர்களும் www.tnprivatejobs.tn.gov.in, www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு jobfairmccsalem@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாகவும், 0427-2401750 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்’ என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x