

கோவை அரசுப் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் பணியிடத்துக்கு வரும் 6-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: பள்ளிக்கல்வித் துறையின் கட்டுப்பாட்டின்கீழ் இயங்கும் ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 2022-2023-ம் கல்வியாண்டில் ஜூன் 1-ம் தேதி நிலவரப்படி காலியாக உள்ள இடைநிலை, பட்டதாரி, முதுகலை ஆசிரியர் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர் நியமனம் மேற்கொள்ளப்பட உள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களை நேரடியாகவோ அல்லது மின்னஞ்சல் வாயிலாகவோ உரிய கல்வித் தகுதி சான்றுகளுடன் தொடர்புடைய மாவட்ட கல்வி அலுவலரிடம் (டிஇஓ) சமர்ப்பிக்க வேண்டும்.
இதுதொடர்பான காலிப்பணியிட விவரங்கள் முதன்மைக்கல்வி, மாவட்டக்கல்வி, வட்டாரக்கல்வி அலுவலகங்களின் அறிவிப்புப் பலகையில் வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு வரும் 6-ம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அதன்பிறகு அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.
தகவல் பலகையில் வெளியிடப்படும் காலிப்பணியிட விவரங்கள் மாறுதலுக்கு உட்பட்டது. விண்ணப்பங்களை கோவை கல்வி மாவட்ட டிஇஓ cbedeo@yahoo.co.in, பேரூர் கல்வி மாவட்ட டிஇஓ deoperurcoimbatore@gmail.com, சர்கார் சாமக்குளம் கல்வி மாவட்ட டிஇஓ deosskulam@gmail.com, பொள்ளாச்சி கல்வி மாவட்ட டிஇஓ deo_poy@yahoo.co.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.