Published : 06 May 2022 04:16 PM
Last Updated : 06 May 2022 04:16 PM

தமிழகத்தில் ஆகஸ்ட் மாதத்துக்குள் 1 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு: அமைச்சர் சி.வி.கணேசன்

உதகை: "தமிழக அரசு வரும் ஆகஸ்ட் மாதத்துக்குள் ஒரு லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தர திட்டமிட்டுள்ளது" என்று தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் தெரிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்டம் உதகையில் தனித்துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 12-ம் தேதி நடைபெறவுள்ளது. இதனிடையே, உதகையில் நடைபெற்று வரும் முகாமுக்கான ஏற்பாடுகளை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் உதகை தமிழகம் விருந்தினர் மாளிகையில் நடைபெற்ற அனைத்து துறை அதிகாரிகளுடனான ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் கலந்துகொண்டனர். இதில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை இயக்குநர் வீரராகவ ராவ், மாவட்ட ஆட்சியர் அம்ரித், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆஷிஸ் ராவத் ஆகியோர் பங்கேற்றனர்.

கூட்டத்திற்கு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சிவி கணேசன் கூறியது: "தமிழகத்தில் இதுவரை 56 இடங்களில் வேலை வாய்ப்பு முகாம்களை நடத்தி 72,000 பேருக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரபட்டுள்ள நிலையில், நீலகிரி மாவட்டம் உதகையில் 12-ம் தேதி வேலை வாய்ப்பு முகாம் நடத்தபடுகிறது. தமிழக அரசு வரும் ஆகஸ்ட் மாதத்துக்குள் 1 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தர திட்டமிட்டுள்ளது.

தமிழகத்தில் 37 லட்சத்து 50 ஆயிரம் அமைப்பு சாரா தொழிலாளர்கள் உள்ளனர். அவர்களில் அதிமுக ஆட்சி காலத்தில் 75 ஆயிரம் பேருக்கு நல திட்டம் உதவிகள் வழங்கப்படாமல் இருந்தது. அவர்களையும் சேர்த்து இதுவரை 1 லட்சத்து 7 ஆயிரம் பேருக்கு நல திட்டம் திமுக ஆட்சியில் வழங்கபட்டுள்ளது. அரசு பொறுப்பேற்று ஒரே ஆண்டில் 4 லட்சத்து 6 ஆயிரம் பேருக்கு ரூ.299 கோடிக்கு நல திட்டங்கள் வழங்கபட்டுள்ளன.

ஆட்டோ ஓட்டும் 500 பெண்களுக்கு ரூ.1 லட்சம் மானியத்தில் ஆட்டோ வழங்கும் திட்டம், தொழிலாளி இறந்தால் வழங்கபட்டு வந்த ஒரு லட்சம் நிதி ரூ.2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. அவர்களின் மகனோ அல்லது மகளோ திருமணம் செய்ய ரூ.20 ஆயிரம் நிதி உதவி வழங்கும் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள 91 தொழிற்பயிற்சி நிலையங்கள் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டபட்ட நிலையில், அவற்றில் உள்ள உபகரணங்கள், இயந்திரங்களை மேம்படுத்தி நவீனமயமாக்க ரூ.2,877 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் 71 தொழிற் பயிற்சி நிலையங்கள் புனரமைக்கபட்டுள்ளது; புதிதாக 11 தொழிற் பயிற்சி நிலையங்கள் உருவாக்கபடும்" என்று அமைச்சர் சிவி கணேஷன் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x