Published : 28 Apr 2022 06:04 AM
Last Updated : 28 Apr 2022 06:04 AM

நாமக்கல்லில் வெள்ளிக்கிழமை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

நாமக்கல்: நாமக்கல்லில் நாளை (29-ம் தேதி) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

இதுதொடர்பாக நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தனியார் துறை நிறுவனங்களும், தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள மனுதாரர்களும் நேரடியாக சந்திக்கும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் வாரந்தோறும் வெள்ளிக் கிழமைகளில் நடைபெறுகிறது. மேலும், ஒவ்வொரு மாதமும் 3-வது வெள்ளிக்கிழமை மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும்.

இந்த வாரத்துக்கான முகாம் நாளை (29-ம் தேதி) நடைபெறவுள்ளது. எனவே, தனியார் துறை நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான நபர்களை அவர்களது நிர்வாகிகளைக் கொண்டு நேரில் தேர்வு செய்து கொள்ளலாம். முகாமில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர்.

10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மற்றும் பெறாதவர்கள், பிளஸ் 2, டிப்ளமோ, ஐடிஐ, பட்டப்படிப்பு மற்றும் கணினி பயிற்சி பெற்றோர் முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம். மேலும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் வழங்கும் இலவச திறன் பயிற்சிகளில் சேர பதிவும், ஆலோசனையும் வழங்கப்படும். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் நாளை காலை 10.30 மணிக்கு நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் நடைபெறவுள்ள முகாமில் கலந்து கொண்டு பயன்றலாம் என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x