

சென்னை: ப்ளஸ் 2 முடித்த, ஆர்வமுள்ள மாணவர்கள், பெண்களுக்கு ஆடை வடிவமைப்பு மற்றும் உற்பத்தியில் பட்டயப் படிப்பை, கிண்டியிலுள்ள ஆடை வடிவமைப்பு மற்றும் பயிற்சி மையம் இலவசமாக வழங்குகிறது. ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் இந்தப் பயிற்சி தொடங்குகிறது.
ஆயத்த ஆடைத்துறையில் ஒருங்கிணைந்த திறன் மேம்பாட்டுத்திட்டத்தினை செயல்படுத்தும் விதமாக 1991ஆம் ஆண்டு, இந்திய அரசு மற்றும் மத்திய ஜவுளித்துறை நிதியுதவியுடன் தொடங்கப்பட்ட ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு சபையின் மூலம் பல்வேறு பயிற்சி திட்டங்களை வழங்கி வருகிறது. அதன்படி கிண்டி தொழிற்பேட்டையில் இயங்கி வரும், ஆடை வடிவமைப்பு மற்றும் பயிற்சி மையம் ஆயத்த ஆடை வடிவமைப்புத் துறையில் ஆர்வமுள்ளவர்களுக்கு வேலைவாய்ப்பினை பெறும் வகையில் இலவசமாக பட்டய படிப்பை வழங்குகிறது.
இத்திட்டத்தின் படி தினமும் 3 - 4 மணிநேரம் செலவு செய்து 6 மாதம் முதல் ஒரு வருடத்தில் பயிற்சியை முடித்து வேலைக்கு செல்லும் படியான நீண்டகால பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்தப் பயிற்சியில் மாணவர்களுக்கு ஜவுளி, ஆயத்த ஆடை வடிவமைப்பு மற்றும் தையல், வடிவமைப்பு, தயாரிப்பு தொழில்நுட்பம் ஆகியவற்றை வாய்மொழி மற்றும் செய்முறை விளக்கமாகவும் கற்றுக் கொடுக்கப்படுகிறது.
இப்பட்டயப் படிப்பில் சேர்ந்து பயிற்சி பெறுவதற்கு மாணவர்கள் பன்னிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்தப் பாடப்பயிற்சி ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் தொடங்க இருக்கிறது. பயிற்சி முடிந்ததும் ஆயத்த ஆடை துறையில் மாணவர்கள் உறுதியாக வேலைவாய்ப்பினைப் பெற முடியும். இதற்கு கட்டணங்கள் எதுவும் கிடையாது
பட்டயப்படிப்பில் சேர்ந்து பயிற்சி பெற ஆர்வமுள்ள மாணவர்கள் தொடர்புகொள்ள வேண்டிய செல்பேசி எண்கள்: 9840416769, 8072241314, 9952056889