

சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் வானியல் ஆராய்ச்சி மையம் தொலைதூர விமான ஓட்டி (ரிமோட் பைலட்) பயிற்சிக்கான உரிமத்தை பெற்றுள்ளது என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றத்தின் மக்களவையில் கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த விமான போக்குவரத்து இணை அமைச்சர் ஜெனரல் வி. கே .சிங், "ட்ரோன் விதிகள் 2021-ன் படி, தொலைதூர விமான ஓட்டி பயிற்சி அமைப்பை நிறுவ விரும்பும் நபர், விமானப் போக்குவரத்து தலைமை இயக்குநருக்கு அதற்கான படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும். 2021 டிசம்பர் 31 வரை அரசு அல்லது தனியாருக்கு சொந்தமான 9 தொலைதூர விமான ஓட்டி பயிற்சி மையங்கள் நிறுவப்பட்டுள்ளன.
இவற்றில், தமிழ்நாட்டில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் வானியல் ஆராய்ச்சி மையம் ஒன்று. 18 முதல் 65 வயது வரையிலான எந்த ஒரு நபரும் பத்தாம் வகுப்பு நிறைவு செய்திருக்கும் பட்சத்தில் தொலைதூர விமான ஓட்டி உரிமத்தை பெற முடியும். ட்ரோன் பள்ளிகளிலிருந்து பயிற்சி முடித்து விட்டு வெளியே வரும் மாணவர்கள், ட்ரோன் செயல்பாடுகள், பராமரிப்பு, வடிவமைப்பு, தயாரிப்பு மற்றும் தரவு மேலாண்மை உள்ளிட்டவற்றில் வேலைவாய்ப்புக்களை பெறலாம்" என்று குறிப்பிட்டுள்ளார்.