Published : 20 Sep 2021 04:31 PM
Last Updated : 20 Sep 2021 04:31 PM

வேலை வேண்டுமா?- மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

சிடெட் எனப்படும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வை எழுத இன்று (செப்.20) முதல் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி அனைத்து வகைப் பள்ளிகளிலும் ஆசிரியராகப் பணியில் சேர மத்திய அரசு, மாநில அரசுகள் நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அதன்படி கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் உள்ளிட்ட சிபிஎஸ்இ பாடத்திட்டம் பின்பற்றப்படும் பள்ளிகளில், ஒன்று முதல் 8-ம் வகுப்பு வரை ஆசிரியராகப் பணியாற்ற ‘சி-டெட்’ எனப்படும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

இத்தேர்வு ஆண்டுதோறும் பிப்ரவரி, ஜூலை மாதங்களில் நடத்தப்படுகிறது. இத்தேர்வை சிபிஎஸ்இ நடத்துகிறது. கரோனா காரணமாகக் கடந்த ஆண்டு தேர்வு இந்த ஆண்டு ஜூன் மாதம் நடத்தப்பட்ட நிலையில், 2021-ம் ஆண்டுக்கான தேர்வு டிசம்பர் மாதம் நடைபெற உள்ளது.

இந்தத் தேர்வு மொத்தம் 2 தாள்களைக் கொண்டது. முதல் தாளில் தேர்ச்சி பெறுபவர்கள் இடைநிலை ஆசிரியராகவும், 2-ம் தாளில் தேர்ச்சி அடைபவர்கள் பட்டதாரி ஆசிரியராகவும் பணிபுரியலாம்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.1200 (இரண்டு தாள்களுக்கும்) | எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு: ரூ.600
ரூ.1000 (ஏதேனும் ஒரு தாளுக்கு) | எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு: ரூ.500

தேர்வு நடைபெறும் மொழிகள்: தமிழ், ஆங்கிலம், இந்தி உட்பட 20 மொழிகள்

தேர்வு நடைபெறும் முறை: ஆன்லைன் மூலம் கணினி வழித் தேர்வு

விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 19.10.2021

விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தக் கடைசி நாள்: 20.10.2021 மாலை 3.30 மணி வரை

திருத்தங்களை மேற்கொள்ள: 22.10.2021 - 28.10.2021

தேர்வுத் தேதி: 16-12-2021 முதல் 13-01-2022 வரை.

கூடுதல் தகவல்களுக்கு: https://ctet.nic.in/webinfo/File/ViewFile?FileId=191&LangId=P

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுச் சான்றிதழ் வாழ்நாள் முழுவதும் செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x