

சென்னை: அரசுப் பள்ளிகளில் 2,511 பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர். அதற்கான பணிநியமன கலந்தாய்வு சென்னையில் இன்றும், நாளையும் (செப்.3, 4) நடைபெறவுள்ளது.
தமிழக பள்ளிக்கல்வித் துறையின்கீழ் செயல்பட்டு வரும் அரசுப் பள்ளிகளில் 3,192 பட்டதாரி ஆசிரியர்கள், வட்டார வளமைய ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு 2023 அக்.25-ம் தேதி வெளியிடப்பட்டது.
அமைச்சுப் பணியாளர்களுக்கு 2 சதவீத ஒதுக்கீடு போக தற்போது 2,511 பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
அதன்படி ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு சென்னை அசோக் நகர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, திருவல்லிக்கேணி லேடி வெலிங்டன் மேல்நிலை பள்ளி உள்பட 6 இடங்களில் இன்று (செப். 3) பணி நியமன கலந்தாய்வு நடைபெறவுள்ளது. அதில் அறிவியல் பாட ஆசிரியர்களுக்கு மட்டும் நாளையும் (வியாழன்) கலந்தாய்வு நடைபெறும்.