

சென்னை: பூடான் அரசு மருத்துவமனைகளில் நர்சுகளுக்கு வேலைவாய்ப்பு இருப்பதாக தமிழக அரசின் அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர் சஜன்சிங் ஆர்.சவான் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: பூடான் நாட்டின் சுகாதார அமைச்சக மருத்துவமனைகளில் பணியாற்ற நர்சுகள் தேவைப் படுகின்றனர். பிஎஸ்சி நர்சிங் படித்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் 2 ஆண்டு பணி அனுபவம் அவசியம். வயது 23 முதல் 45-க்குள் இருக்க வேண்டும்.
ஆண், பெண் இரு பாலரும் விண்ணப்பிக்கலாம். 2 முதல் 5 ஆண்டு அனுபவம் உள்ளோருக்கு ரூ.65 ஆயிரமும், 6 முதல் 10 ஆண்டு அனுபவம் உடையவர்களுக்கு ரூ.73 ஆயிரமும், 10 ஆண்டுக்கு மேல் பணி அனுபவம் உள்ளோருக்கு ரூ.86 ஆயிரமும் ஊதியமாக வழங்கப்படும். கூடுதல் விவரங்களை www.omcmanpower.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம். நர்சு பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கல்விச் சான்றிதழ், பாஸ்போர்ட், பணி அனுபவச் சான்றிதழ் ஆகியவற்றின் நகலை சுய விவரங்களுடன் ovemclmohsa2021@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு ஏப்ரல் 18ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
படிப்பு மற்றும் பணி விவரங்களின் தகுதியைப் பொறுத்து முன்னுரிமை வழங்கப்படும், இந்தப் பணிக்கு தேர்ச்சி பெறும் பணியாளர்களிடமிருந்து சேவைக் கட்டணமாக ரூ.35,400 மட்டும் வசூலிக்கப்படும் என்று செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.