

சென்னை: ஐடிஐ, டிப்ளமோ தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், அம்பத்தூரில் நாளை நடைபெறுகிறது. இதில், 100-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் பங்கேற்கவுள்ளதாக சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் இயங்கும், சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில், அம்பத்தூர் தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தில் உள்ள வேலையளிப்பவர்களுக்கென தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், அம்பத்தூர் எய்மா வளாகத்தில் நாளை (26-ம் தேதி) நடைபெறவுள்ளது. காலை 9 முதல் மாலை 3 மணிவரை முகாம் நடைபெறும். அனுமதி இலவசம்.
இந்த முகாமில், 100-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்று, ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களுக்கு ஆள்தேர்வு நடத்துகின்றனர். இதில் கலந்து கொள்ள விருப்பமுள்ள ஐடிஐ, டிப்ளமோ, 10, 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து, பங்கேற்று பயனடையுமாறு சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.