

சென்னை: சென்னையில் இன்று தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் என ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்கள் சார்பில் கிண்டி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் 16--ம் தேதி (இன்று) காலை 10 முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளது.
இம்முகாமில் 8, 10, 12-ம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ, பொறியியல், கலை, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பிரிவில் ஏதாவது ஒரு பட்டம் ஆகிய கல்வித்தகுதியை உடைய அனைவரும் கலந்துகொள்ளலாம். முகாமில் 20-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு காலியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர்.
இம்முகாம் வாயிலாக பணி நியமனம் பெறும் இளைஞர்களின் வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது. முகாமுக்கு எந்தவித கட்டணமும் செலுத்தத் தேவையில்லை. இதில் கலந்துகொள்ளும் இளைஞர்கள், வேலையளிப்பவர்கள் தங்கள் விவரங்களை தமிழ்நாடு தனியார் துறை வேலைவாய்ப்பு இணையதளத்தில் (http://www.tnprivatejobs.tn.gov.in) பதிவேற்றம் செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.