

சென்னை: தமிழக அரசின் சார்பில் இலவச தனியார் வேலைவாய்ப்பு முகாம் சென்னை கிண்டியில் இன்று நடைபெறுகிது. இதில் 20-க்கும் மேற்பட்ட தனியார் முன்னணி நிறுவனங்கள் பங்கேற்கின்றன.
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மையங்கள் மூலம் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் பெற்றுத்தரப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக சென்னை கிண்டியில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மையம் சார்பாக இன்று (ஏப்.25) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
இந்த முகாமில் 20-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு காலிப்பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்யவுள்ளனர். 8, 10, 12-ம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ, பொறியியல், கலை, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பிரிவில் பட்டம் உள்ளிட்ட கல்வித் தகுதியை உடைய அனைவரும் பங்கேற்கலாம். முகாம் காலை 10 முதல் மதியம் 2 மணி முகாம் நடத்தப்படும். கூடுதல் விவரங்களை www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
முகாமில் கலந்து கொள்ள எவ்வித கட்டணமும் செலுத்த தேவை இல்லை. முகாம் வாயிலாக பணி நியமனம் பெறும் இளைஞர்களின் வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படாது. முகாமில் கலந்து கொள்வதற்கு தங்களது விவரங்களை மேல்குறிப்பிடப்பட்ட தமிழ்நாடு தனியார் துறை வேலைவாய்ப்பு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யுமாறு, வேலைவாய்ப்பற்ற இளைஞர்களை இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறும் சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அறிவுறுத்தியுள்ளார்.