

சென்னை: டிப்ளமா, ஐடிஐ கல்வித் தகுதியுடைய ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளுக்கான போட்டித் தேர்வுகள் நாளை (சனிக்கிழமை) தொடங்குவதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. நவம்பர் 16-ம் தேதி வரை நடைபெறும் இத்தேர்வுகளை 37,808 பேர் எழுதுகின்றனர்.
மோட்டார் வாகன ஆய்வாளர் (கிரேடு-2), டிராப்ட்ஸ்மேன் (கிரேடு-2), இளநிலை வரைவு அலுவலர், இளநிலை தொழில்நுட்ப உதவியாளர், சிறப்பு மேற்பார்வையாளர், சர்வேயர், உதவி வேளாண் அலுவலர், நெசவு மேற்பார்வையாளர், ஆவின் நிர்வாகி (ஆய்வகம்), டெக்னீசியன் (பாய்லர்) உள்ளிட்ட டிப்ளமா மற்றும் ஐடிஐ கல்வித்தகுதி கொண்ட பதவிகளில் 861 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி கடந்த ஆகஸ்ட் 13-ம் தேதி வெளியிட்டது.
இதற்கான பொது அறிவு மற்றும் கட்டாய தமிழ் மொழி தகுதித்தேர்வு நவம்பர் 9-ம் தேதியும், வெவ்வேறு பாடங்களுக்கான தேர்வுகள் நவம்பர் 11 முதல் 14-ம் தேதி வரையும் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணி தேர்வுகளுக்கு (டிப்ளமா மற்றும் ஐடிஐ கல்வித்தகுதி) தேர்வுக்கு 37 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஆன்லைனில் விண்ணப்பித்தனர். இந்நிலையில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டவாறு எழுத்துத்தேர்வுகள் நாளை (சனிக்கிழமை) ஆரம்பமாகின்றன.
முதல் நாளன்று காலையில் பொது அறிவு மற்றும் கட்டாய தமிழ் மொழி தாள் தேர்வும், பிற்பகல் சிவில் இன்ஜினியரிங் பாட தேர்வும் நடைபெறுகின்றன. தொடர்ந்து வெவ்வேறு பாடங்களுக்கான தேர்வுகள் 11-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை அடுத்தடுத்து நடைபெற உள்ளன. பொது அறிவு தாள் மற்றும் தமிழ்மொழி தகுதித்தாள் தேர்வும் ஓஎம்ஆர் ஷீட் வடிவிலான தேர்வாக இருக்கும். பாடங்களுக்கான தேர்வுகள் கணினிவழியில் நடத்தப்படும். இத்தேர்வுகளை எழுத 28,402 ஆண்கள், 9,406 பெண்கள் என மொத்தம் 37,808 பேர் அனுமதிக்கப்பட்டிருப்பதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.