

சென்னை: உதவி வனப் பாதுகாவலர் பணிக்கான நடைபெற்ற எழுத்துத்தேர்வு, நேர்காணல் மதிப்பெண் விவரங்கள் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு வனப்பணியில் அடங்கிய உதவி வனப்பாதுகாவலர் பதவியில் 9 காலியிடங்களை நிரப்புவதற்கான முதன்மை எழுத்துத் தேர்வு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 13 முதல் 17-ம் தேதி வரை நடைபெற்றது. இத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டது. இந்நிலையில், நேர்முகத் தேர்வில் பங்கேற்ற 25 தேர்வர்களின் எழுத்துத் தேர்வு மதிப்பெண் மற்றும் நேர்காணல் மதிப்பெண் விவரங்கள் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, மதிப்பெண் மற்றும் இடஒதுக்கீடு அடிப்படையில் பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் வெளியாகும். டிஎன்பிஎஸ்சி குருப்-1 ஏ தேர்வு மூலம் தமிழக அரசின் வனத்துறையில் நேரடியாக உதவி வனப்பாதுகாவலர் பணியில் சேருவோர் குறிப்பிட்ட ஆண்டுகளில் இந்திய வனப்பணி அதிகாரியாக (ஐஎஃப்எஸ்) பதவி உயர்வு பெறலாம். அதோடு அவர்களுக்கு தமிழ்நாடு கேடர் ஒதுக்கீடு செய்யப்படும். அவர்கள் விரும்பினால் மத்திய அரசு பணிக்கும் செல்லலாம் என்பது குறிப்பிடத்தக்கது.