

சென்னை: தலைமைச் செயலக நிருபர், சுருக்கெழுத்து தட்டச்சர் மற்றும் தட்டச்சர் பணிகளுக்கு அரசு கணினி சான்றிதழ் தேர்வு தேர்ச்சியை கட்டாயமாக்கி தமிழக சட்டப்பேரவை செயலர் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக சட்டப்பேரவை செயலர் கே.சீனிவாசன் வெளியிட்டுள்ள ஓர் அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது: தலைமைச் செயலக நிருபர் (தமிழ் மற்றும் ஆங்கிலம்), சுருக்கெழுத்து தட்டச்சர் மற்றும் தட்டச்சர் பணிகளுக்கு தேர்வுசெய்யப்படுவோர் தங்கள் தகுதிகாண் பருவத்துக்குள் தொழில்நுட்பக்கல்வி இயக்ககம் நடத்தும் அரசு கணினி சான்றிதழ் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும்.
கணினியில் டிப்ளமா அல்லது பட்டம் பெற்றிருந்தாலோ அல்லது கம்ப்யூட்டர் இன்ஜினியரிங், கம்ப்யூட்டர் சயின்ஸ் , இன்பர்மேஷன் டெக்னாலஜி, சாப்ட்வேர் இன்ஜினியரிங் பட்டதாரிகளாக இருந்தாலோ அவர்களுக்கும், ஏற்கெனவே இந்த பணிகளில் உள்ளோருக்கும் இந்த உத்தரவிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது, என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு கணினி சான்றிதழ் தேர்வை (Certificate course in Computer on Office Automation-COA) மாநில தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் ஆண்டுக்கு 2 முறை (பிப்ரவரி மற்றும் ஆகஸ்ட்) நடத்தி வருகிறது. குறைந்தபட்சம் 10-ம் வகுப்பு கல்வித்தகுதியும் தட்டச்சு தேர்வில் லோயர் கிரேடு (தமிழ் அல்லது ஆங்கிலம்) முடித்திருந்தால் இத்தேர்வை எழுதலாம் என்பது குறிப்பிடத்தக்கது.