கடந்த ஆண்டு நடத்தப்பட்ட குருப்-4 தேர்வுக்கான 3-வது கட்ட கலந்தாய்வு: மார்ச் 8-ம் தேதி நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: கடந்த ஆண்டு நடத்தப்பட்ட குருப்-4தேர்வுக்கான 3-வது கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு வரும் 8-ம் தேதி நடைபெறும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் எஸ்.கோபாலசுந்தரராஜ் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கடந்த ஆண்டு நடத்தப்பட்ட குருப்-4 தேர்வின் 3-வது கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு வரும் 8-ம் தேதி சென்னையில் உள்ள தேர்வாணையத்தின் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதற்கு அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் பட்டியல் தேர்வாணையத்தின் இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது.

அழைப்புக் கடிதம்: சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர்கள் கலந்தாய்வுக்கான அழைப்புக் கடிதத்தை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இதுகுறித்த தகவல் அவர்களுக்கு எஸ்எம்எஸ் மற்றும் மின்னஞ்சல் வாயிலாக தெரிவிக்கப்படும். அழைப்புக் கடிதம் தபால் மூலம் அனுப்பப்பட மாட்டாது.

விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண், ஒட்டுமொத்த தரவரிசை, இடஒதுக்கீடு ஆகியவற்றின் அடிப்படையில் கலந்தாய்வுக்கு அனுமதிக்கப்படுவர். எனவே, அழைக்கப்படும் அனைவருக்கும் பணிநியமனம் வழங்கப்படும் என்பதற்கு உறுதியளிக்க இயலாது. அசல் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வுக்கு வரத் தவறினால், மறுவாய்ப்பு அளிக்கப்பட மாட்டாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in