

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வேலைநாடுநர்களை தனியார் துறைகளில் பணியமர்த்தும் நோக்கத்தோடு, கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் பிப்.11-ம் தேதி கள்ளக்குறிச்சி ஏ.கே.டி.மெட்ரிக் பள்ளியில் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறவுள்ளது.
இம்முகாமில் தொழில் துறை, சேவைத் துறை, விற்பனைத் துறை போன்ற தமிழக அளவில் பல்வேறு முன்னணி தனியார் துறைகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொண்டு தகுதியுள்ள நபர்களை வேலைக்கு தேர்ந்தெடுக்கவுள்ளனர். இத்தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமில் 8-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி, பிளஸ் டூ, ஐ.டி.ஐ, டிப்ளமோ, அக்ரி, செவிலியர், ஆசிரியர் தகுதி, ஹோட்டல் மேனேஜ் மென்ட், இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகள் மற்றும் பொறியியல் பட்டப்படிப்புகள் போன்ற கல்வித் தகுதிகளையுடைய 18 வயது முதல் 40 வயதுக்குட்பட்ட வேலைதேடுபவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் சுய விவரக் குறிப்புகளுடன், அனைத்து கல்விச் சான்றுகளின் நகல்கள், ஆதார் அட்டை மற்றும் பாஸ் போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
இத்தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமில், ஒரே இடத்தில் பல்வேறு தனியார் நிறுவனங்களின் நேர்காணலில் கலந்துகொண்டு வேலைநாடுநர்கள் தாங்கள் விரும்பும் வேலை வாய்ப்பினை பெற இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். மேலும், இம்முகாம் குறித்த கூடுதல் விவரங்களுக்கு 88072 04332, 04151-295422 என்ற எண்ணை தொடர்பு கொண்டு, கள்ளக்குறிச்சி மாவட்ட வேலை நாடுநர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் தெரிவித்துள்ளார்.