

சென்னை: தமிழகத்தில் காலியாகவுள்ள 2,250 துணை செவிலியர், கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்களுக்கான நியமனங்களை மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், தமிழகம் முழுவதும் காலியாகவுள்ள 2,250 துணை செவிலியர்கள் மற்றும் கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கையை மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (எம்ஆர்பி) வெளியிட்டுள்ளது.
துணை செவிலியர்கள் மற்றும் கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களுக்கு https://www.mrb.tn.gov.in/ என்ற இணையதளத்தில் வரும் 31-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். பதிவுக் கட்டணம் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.300 ஆகவும், மற்ற பிரிவினருக்கு ரூ.600 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் வழியாக பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும்.
கூடுதல் விவரங்களுக்கு எம்ஆர்பி இணையதளத்தை பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்.