Published : 13 Sep 2023 06:12 AM
Last Updated : 13 Sep 2023 06:12 AM

சென்னையில் செப்.16-ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

சென்னை: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை ஒட்டி, சென்னை மாதவரத்தில் வரும் செப்.16-ம் தேதி அரசு சார்பில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை ஒட்டி வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையால் தமிழகம் முழுவதும் 100 தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன.

சென்னை மாவட்டத்தின் 2-வது மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்வரும் செப்.16-ம் தேதி சனிக்கிழமை மாதவரத்தில் அமைந்துள்ள ஜெயகோவிந்த் ஹரிகோபால் அகர்வால் – அகர்சன் கல்லூரியில் காலை 8 மணிமுதல் மாலை 3 மணிவரை நடைபெறுகிறது.

இம்முகாமில் 150-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்று 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு ஆட்களைத் தேர்வு செய்யவுள்ளன. இம்முகாமில் 8-ம் வகுப்பு தேர்ச்சி முதல் பிளஸ்-2 தேர்ச்சி, பட்டதாரிகள், பட்டயப் படிப்பு படித்தவர்கள், தொழில் கல்வி பெற்றவர்கள், பொறியியல் பட்டம், கணினி இயக்குபவர்கள், தையல் கற்றவர்கள் என அனைத்து வித தகுதியுள்ள நபர்களும் இலவசமாகப் பங்கேற்கலாம்.

இம் முகாமில் தமிழ்நாடு திறன்மேம்பாட்டுக் கழகத்தின் இலவசதிறன் மேம்பாட்டுப் பயிற்சிகளுக்கான பதிவு, மாவட்ட தொழில்மையத்தின் தொழில் முனைவோர்களுக்கான ஆலோசனைகள், மாவட்ட முன்னோடி வங்கியின் வாயிலாக வங்கிக் கடன் வழிகாட்டுதல்கள் ஆகியவை வழங்கப்படும்.

தனியார் துறையில் பணிபுரிய ஆர்வமாக உள்ள அனைவரும் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து, இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு பயனடையலாம். தேர்ந்தெடுக்கப்பட்டு தனியார்துறையில் பணியமர்த்தப்படுவோரின் வேலை வாய்ப்பு அலுவலகபதிவு எண் ரத்து செய்யப்படமாட்டாது.

மேலும், இம்முகாம் தொடர்பான விவரங்களுக்கு சென்னை, மாவட்டவேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ, 044-24615160 என்ற தொலைபேசி எண் வாயிலாகவோ, pjpsanthome@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி வாயிலாகவோ தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x