

செமி கண்டக்டர் துறை வளர்ச்சிக்காக மத்திய பட்ஜெட்டில் ரூ.40 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மத்திய பட்ஜெட்டில் இதுகுறித்து கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் செமி கண்டக்டர் உற்பத்தியை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. இதற்காகவே புதிதாக செமிகண்டக்டர் இயக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. கருவிகள் மற்றும் கச்சா பொருள்கள் மற்றும் இந்திய அறிவுசார் சொத்துகளை உற்பத்தி செய்வதற்காக ஐஎஸ்எம் 1.0 (இந்தியா செமி கண்டக்டர் மிஷன்), ஐஎஸ்எம் 2.0 அடிப்படையிலான கட்டமைப்புகள் தொடங்கப்படும். செமிகண்டக்டர் 2.0 இயக்கத் திட்ட வளர்ச்சிக்கு இந்த ஆண்டில் ரூ.40 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 2 மடங்கு அதிகமாகும்.
செமி கண்டக்டர் துறையில் தற்போது 46 திட்டங்களுக்கு அனுமதி தரப்பட்டுள்ளது. இதன்மூலம் ரூ.54,567 கோடி முதலீடு செய்யப்படும். இந்த நிறுவனங்கள் தொடங்கப்பட்டு முழு உற்பத்தியை எட்டும்போது ரூ.3,67,669 கோடி மதிப்பிலான பொருட்களின் உற்பத்தி இருக்கும். இந்தத் துறை மூலம் நேரடியாக 50 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
இந்தத் திட்டம் மூலம் 2030-31-ம் ஆண்டுக்குள் 500 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான மின்னணு உற்பத்தி சுற்றுச்சூழல் அமைப்புக்கு அடித்தளம் அமைக்கப்படும். மேலும், இந்தியாவின் தொழில்நுட்ப இறையாண்மைக்கும் உலகளாவிய நம்பிக்கைக்கும் இது வலு சேர்க்கும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.