

புதுடெல்லி: இந்திய கொடி ஏந்திய இரண்டு சரக்கு கப்பல்கள் வளைகுடா நாட்டில் இருந்து எல்பிஜி உடன் பாதுகாப்பாக ஹார்முஸ் ஜலசந்தியை கடந்துள்ளதாக இந்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஷிவாலிக் மற்றும் நந்தா தேவி என அறியப்படும் இந்த சரக்கு கப்பல்கள் தற்போது குஜராத் மாநிலத்தை நோக்கி வந்து கொண்டுள்ளன. அந்த மாநிலத்தின் முந்த்ரா மற்றும் கண்ட்லா துறைமுகங்களுக்கு இந்த கப்பல்கள் வந்து கொண்டுள்ளதாக அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த இரண்டு சரக்கு கப்பல்களிலும் சுமார் 92700 டன் எல்பிஜி உள்ளதாக அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலை படைகள் இணைந்து ஈரான் மீது கடந்த பிப்ரவரி 28-ம் தேதி தாக்குதலை தொடங்கின. அதையடுத்து ஈரானும் அமெரிக்காவுக்கு பதிலடி தரும் வகையில் வளைகுடா நாடுகளின் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் மேற்கு ஆசியாவில் போர் மூண்டுள்ளது. இதனால் வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை ஹார்முஸ் ஜலசந்தி வழியாக இந்தியா உட்பட பல்வேறு நாடுகளுக்கு கொண்டு வரும் சரக்கு கப்பல்களின் போக்குவரத்து முடங்கியது. இந்த ஜலசந்தியில் ஈரான் முடக்கவில்லை என தெரிவித்தது. இருப்பினும் தாக்குதல் சார்ந்த பதற்றம் காரணமாக போக்குவரத்து முடங்கியது.
இந்நிலையில், ஹார்முஸ் ஜலசந்தியின் மேற்கு பகுதியில் முடங்கியிருந்த 30+ சரக்கு கப்பலிகளில் தற்போது எல்பிஜி உடன் குஜராத் வந்து கொண்டிருக்கும் இரு கப்பல்களும் அடங்கும்.
இந்தியாவின் கச்சா எண்ணெய் மற்றும் எல்பிஜி தேவையில் 80 சதவீதத்துக்கும் மேலாக இறக்குமதியைச் சார்ந்தே உள்ளது. இந்த ஹார்முஸ் ஜலசந்தி வழித்தடத்தில் பாதிப்பு ஏற்பட்டால் இந்தியப் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படும் என துறை சார்ந்த வல்லுநர்கள் தெரிவித்திருந்தனர்.
இதன் பின்னணியில்தான், இந்தியக் கப்பல்களுக்கு மட்டும் ஈரான் தற்போது விலக்கு அளித்துள்ளதாக தகவல். இது இந்தியாவில் எல்பிஜி மற்றும் கச்சா எண்ணெய் தட்டுப்பாட்டை சீராக்கும் என்ற நம்பிக்கையை அளிக்கிறது.
முன்னதாக, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சியுடன் தொலைபேசி வாயிலாக தீவிர ஆலோசனை நடத்தினார். அப்போது இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவையின் அத்தியாவசியத்தை ஜெய்சங்கர் எடுத்துரைத்தார். இரு நாடுகளுக்கும் உள்ள நீண்ட கால உறவு மேம்பட இந்திய கப்பல்களுக்கு வழிவிட வேண்டும் என்று அப்பாஸ் அரக்ச்சியை ஜெய்சங்கர் கேட்டுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.