

புதுடெல்லி: இந்திய பொருட்களுக்கு மெக்ஸிகோ அரசு 50% வரி விதித்திருப்பது குறித்து அந்த நாட்டு அரசுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இந்தியா, சீனா, தென்கொரியா, தாய்லாந்து, இந்தோனேசியா ஆகிய நாடுகளில் இருந்து மெக்ஸிகோ அதிக அளவில் பொருட்களை இறக்குமதி செய்து வருகிறது. குறிப்பாக இந்த நாடுகளில் இருந்து கார்கள், பைக்குகள், மோட்டார் உதிரி பாகங்கள், மின்னணு பொருட்கள், ரசாயனங்கள், ஜவுளி, உருக்கு, பிளாஸ்டிக், காலணிகள் உள்ளிட்ட பல பொருட்களை மெக்ஸிகோ அதிக அளவில் இறக்குமதி செய்கிறது. இந்த பொருட்கள் மெக்ஸிகோவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது.
இதற்கு அமெரிக்க அரசு பகிரங்கமாக எதிர்ப்பு தெரிவித்தது. அமெரிக்கா, மெக்ஸிகோ, கனடா ஆகிய நாடுகள் இடையே யுஎஸ்எம்சிஏ என்ற வர்த்தக ஒப்பந்தம் அமலில் உள்ளது. இதன்படி மெக்ஸிகோவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களில் சுமார் 85% பொருட்களுக்கு வரிவிலக்கு உள்ளது. அடுத்த ஆண்டு ஜூலையில் இந்த ஒப்பந்தம் மறுபரிசீலனை செய்யப்பட உள்ளது. அப்போது. மெக்ஸிகோ உடனான ஒப்பந்தத்தை ரத்து செய்வோம் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்தார்.
இந்த சூழலில் இந்தியா, சீனா, தென்கொரியா, தாய்லாந்து, இந்தோனேசியா ஆகிய 5 நாடுகளின் பொருட்களுக்கு மெக்ஸிகோ அரசு சில நாட்களுக்கு முன்பு 50% வரை வரி விதித்தது. புதிய வரி விதிப்பு வரும் ஜனவரி 1ம் தேதியில் இருந்து அமலுக்கு வர இருக்கிறது. இந்தியா அதிக அளவில் வர்த்தகம் செய்யும் 10 நாடுகளில் ஒன்றாக மெக்ஸிகோ விளங்குகிறது. இருநாடுகள் இடையிலான வர்த்தகம் கடந்த 2024ம் ஆண்டில் 11.7 பில்லியன் டாலரை எட்டியது.
இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறும்போது, "அமெரிக்காவின் அழுத்தம் காரணமாக இந்தியா உள்ளிட்ட நாடுகளின் பொருட்கள் மீது மெக்ஸிகோ அரசு 50% வரியை விதித்திருக்கிறது. இது தொடர்பாக, மத்திய வர்த்தக துறை செயலாளர் ராஜேஷ் அகர்வால், மெக்ஸிகோ பொருளாதார துறை இணை அமைச்சர் லூயிஸ் ரோசன் டோவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இந்திய ஏற்றுமதியாளர்களின் நலன்களை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என்று தெரிவித்தன.
இந்திய ஏற்றுமதியாளர்கள் கூறும்போது, "தற்போதைய சூழலில் மெக்ஸிகோ அரசு இந்திய கார்களுக்கு 20%, ஜவுளிக்கு 15%, மருந்து பொருட்களுக்கு 5% வரி விதித்து வருகிறது. ஸ்மார்ட் போன்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டு இருக்கிறது. இந்த பொருட்கள் மீது 50% வரை வரி விதிக்கப்பட்டால் மெக்ஸிகோவுக்கான ஏற்றுமதி மிகக் கடுமையாகப் பாதிக்கப்படும்" என்றனர்.