

புதுடெல்லி: மத்திய அரசுக்கு சொந்தமான ஏர் இந்தியா நிறுவனத்தை 4 ஆண்டுகளுக்கு முன்பு டாடா குழுமம் வாங்கியது. அதன் பிறகு, விமான சேவையை ஒழுங்குபடுத்த பல்வேறு நடவடிக்கைகளை டாடா குழுமம் மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், முதல் முறையாக போயிங் 787-9 விமானத்தை வாங்கியுள்ளது. இது அந்த நிறுவனத்துக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட முதல் ட்ரீம்லைனர் விமானம் ஆகும். அமெரிக்காவின் சியாட்டில் நகரில் உள்ள போயிங்நிறுவனத்தின் எவரெட் ஆலையில், இந்த ட்ரீம்லைனர் விமானத்தின் உரிமை மாற்றம் தொடர்பான நடவடிக்கையை ஏர் இந்தியா நிறைவு செய்தது.
சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தின் (டிஜிசிஏ) ஆய்வுகளுக்குப் பிறகு, இந்த விமானம் அடுத்த சில நாட்களில் இந்தியாவுக்கு கொண்டு வரப்படும். இந்த புதிய விமானம் எகானமி, பிரீமியம் மற்றும் பிசினஸ் என 3 வகுப்பு இருக்கை அமைப்புகளை கொண்டது.